ஒவ்வோர் ஆண்டும் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு கேலாங் சிராயில் நடைபெறும் சந்தை இவ்வாண்டு செயல்படாது என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, பொது இடங்களில் அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அது விளக்கமளித்தது.
ரமலான் மாதத்தின்போது, தீவின் மற்ற பகுதிகளில் பொதுவாக ஏற்பாடு செய்யப்படும் மற்ற சந்தைகளும் ரத்து செய்யப்படுவதாக மக்கள் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
“குடியிருப்பாளர்களின் நலனைக் கருதி, விழாக்கால சந்தைகளை இம்முறை மக்கள் கழகம் ஏற்பாடு செய்யாது. மார்ச் 18ஆம் தேதியிலிருந்து இது நடப்புக்கு வருகிறது. கேலாங் சிராய் சந்தையுடன் ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ மற்றும் உட்லண்ட்ஸ் பகுதிகளில் நடைபெறும் சந்தைகளும் ரத்து செய்யப்படுகின்றன,” என்று அப்பேச்சாளர் சொன்னார்.
விழாக்கால உணர்வுக்கு இதுபோன்ற சந்தைகள் முக்கிய பங்களிப்பதால், அவை ரத்து செய்யப்படுவது குடியிருப்பாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கக்கூடும் என்பதை மக்கள் கழகம் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனா கிருமி பரவிவரும் காலகட்டத்தில் கூட்டத்தைத் தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.
இவ்வாண்டின் கேலாங் சிராய் சந்தைக்கான குத்தகையை மக்கள் கழகம் வெளியிட்டது குறித்து இம்மாத தொடக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், சந்தை ரத்து செய்யப்படுவதாக இன்று (மார்ச் 18) அறிவிக்கப்பட்டது.
மக்களிடையே பிரபலமான கேலாங் சிராய் சந்தைக்கு பெரிய அளவிலான கூட்டம் வருவது வழக்கம்.
கடந்த ஆண்டு கேலாங் சிராய் சந்தைக்கு இரண்டு மில்லியன் பேர் வருகை அளித்தனர். இச்சந்தைக்கு அத்தனை பேர் வருகை புரிந்தது அதுவே முதன்முறை. 2018ஆம் ஆண்டில் சந்தைக்கு 1.8 மில்லியன் பேர் வருகை அளித்தனர்.
#சிங்கப்பூர் #கேலாங் சிராய் #ரமலான் சந்தை