சமையலறை சன்னல் கண்ணாடியில் விரல் ரேகை தடங்கள் பதிந்திருந்ததால் தமது இல்லப் பணிப்பெண்மீது கோபமுற்ற இல்லத்தரசி ஒருவர், பணிப்பெண்ணிடமே இறைச்சி இடிக்கும் சாதனத்தைக் கொடுத்து தொடர்ந்து 50 தடவை அடித்துக்கொள்ளச் சொன்னார்.
பணிப்பெண் தனது பல்லை இழக்க வைப்பது முதலாளியின் திட்டம்.
முதலாளி கூறியதைச் செய்த 25 வயதான யுனி டேவி லெஸ்டாரி எனும் அந்தப் பணிப்பெண்ணின் கீழ்த்தாடையில் மூன்று பற்கள் ஆடத் தொடங்கியது.
இருந்தும், சிங்கப்பூரரான மூன் சாவ் யெங்கின் கோபம் தீரவில்லை.
சிறிய ரக சுத்தியல் போன்ற சாதனம் ஒன்றை எடுத்து பணிப்பெண்ணின் பல்லின் மீது அடித்தார் மூன். பல் ஒன்று ஒடிந்து விழுந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி வரை 40 வயதான மூன் தனது இல்லப் பணிப்பெண்ணுக்கு இழைத்த கொடுமைகளில் இது ஒரு சம்பவம்.
சிறிய ரக சுத்தியல் போன்ற சாதனத்தால் தாக்கிய மூன்று நாட்களுக்குப் பிறகு, பணிப்பெண் யுனியின் வாயில் 10 தடவஇ குத்தினார் மூன்.
அதனால், பணிப்பெண்ணின் பற்கள் ஆடியதுடன் உதட்டிலிருந்து ரத்தம் வடிந்தது.
இது நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு பணிப்பெண்ணின் இடது கன்னத்தில் பல முறை குத்தினார் மூன்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 15 அன்று, இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையத்தை அழைத்தார் இந்தோனீசிய பணிப்பெண். இந்த நிலையம் பிரச்சினைக்குள்ளாகும் ஊழியர்களுக்கு உதவ என்டியுசியால் 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
பணிப்பெண்ணைத் துன்புறுத்திய மூன்று குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் இன்று ஒப்புக்கொண்ட மூன் மீது அதுபோன்ற மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.
பணிப்பெண்ணுக்கு இழைத்த கொடுமைகளுக்காக மூனுக்கு குறைந்தபட்சம் 15 மாத சிறைத் தண்டனை விதிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், மூனுக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு விதிப்பதற்கான சாத்தியம் இருப்பது பற்றி ஆராய அழைப்பு விடுக்குமாறு அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். மூனுக்கு மன அழுத்தம், ஓசிடி போன்ற பிரச்சினைகள் இருப்பதாக மன நலக் கழகம் வழங்கிய அறிக்கையை அவர் சுட்டிக் காட்டினார்.
தற்போது $5,000 பிணையில் இருக்கும் மூனுக்கு வரும் மே மாதம் 6ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
இறைச்சி இடிக்கும் சாதனத்தால் பணிப்பெண்ணைத் தாக்கியதற்காக மூனுக்கு பத்தரை ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மற்ற கொடுமைகள் ஒவ்வொன்றுக்கும் மூன்றாண்டுகள் வரை சிறை, $7,500 வரை அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.
#சிங்கப்பூர் #பணிப்பெண் கொடுமை