துவாஸ் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று (மார்ச் 17) இரவு மூண்ட தீயை அணைக்க கிட்டத்தட்ட 200 தீயணைப்பாளர்கள் பல மணி நேரம் கடுமையாக போராடினர்.
சம்பவ இடத்திற்கு 45 அவசர வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தீச்சம்பவத்தில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.
ஒன்றரை காற்பந்து திடல் அளவுக்குப் பரவிய தீ, இன்று (மார்ச் 18) காலை 11 மணிக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
எண் 7 துவாஸ் அவென்யூ 18ல் அமைந்துள்ள அந்த தொழிற்சாலையில் தீ மூண்டது குறித்து நேற்று இரவு 9.45 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
ஐந்து மாடிகள் கொண்ட அந்தச் சேமிப்புக் கிடங்கு முழுவதும் தீ பரவியது. அதை அணைக்க முயன்று வருவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இன்று காலை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
தீயை அணைப்பதில் கடுமையான சவால் நிலவியதாக அது சொன்னது.
டீசல் எண்ணெய், துப்புரவுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் திரவம் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அந்தச் சேமிப்புக் கிடங்கில் இருந்தன.
தீச்சம்பவம் நேர்ந்த இடம் புகையால் சூழ்ந்திருந்ததால், அவ்விடத்தைத் தவிர்த்துவிடும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#சிங்கப்பூர் #துவாஸ் #தீ #சேமிப்புக் கிடங்கு