தன் இரு இளம் பிள்ளைகளின் கண் முன்னால் தனது மனைவியின் தலையை மிதித்த 36 வயது ஆடவருக்கு இன்று (மார்ச் 20) ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பெண்டிங் எல்ஆர்டி நிலையத்தில் நடந்த இச்சம்பவத்தில் ஆடவர் மிதித்ததால் ஆடவர் மனைவியின் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தம்பதியிடையே பிரச்சினை இருந்து வந்ததை அடுத்து மாது, 35, அவரின் பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்தார்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று இரவு பத்து மணியளவில் இருவரும் தங்களின் ஏழு வயது மகன், ஆறு வயது மகள் ஆகியோருடன் இருந்த சமயத்தில், தாம் பெற்றோர் வீட்டுக்குத் திரும்ப விரும்புவதாக மனைவி கூறினார்.
அதனால் கோபமடைந்த ஆடவர் மனைவியின் முகத்தில் மூன்று முறை குத்தியதுடன் அவர் கீழே சரிந்து விழுந்த பிறகும் முகத்தில் உதைத்து மிதித்தார்.
அந்த மாதின் முகத்தில் ஏற்பட்ட காயங்களால் ரத்தம் வடிந்தது. அந்தப் பெண் கத்த முடியாதபடி வாயை கைகளால் அந்த ஆட்வர் மூடியதாகவும் கூறப்பட்டது.
சம்பவத்தைப் பார்த்த குழந்தைகள் இருவரும் கண்ணீர் விட்டு அழுததுடன், தாயை அடிப்பதை நிறுத்துமாறு தந்தையிடம் மன்றாடினர்.
சம்பவ இடத்தில் உள்ளோர் தடுத்து நிறுத்தியதை அடுத்து போலிசுக்குத் தகவல் கூறப்பட்டது.
அப்போதைய மனைவிக்கு கடுமையான காயம் விளைவித்ததற்காக அந்த ஆடவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படிகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.
#சிங்கப்பூர்