சிங்கப்பூர் கோவில்களில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்

சிங்கப்பூர் கோவில்களில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்

2 mins read
d50c815a-199c-48f3-b8f7-963382017fe0
இந்து அறக்கட்டளை வாரியம் அதன்கீழ் இயங்கும் அனைத்து கோவில்களிலும் புதிய கட்டுப்பாடுகளை உடனடியாக நடப்புக்குக் கொண்டு வந்துள்ளது. படம்: இணையம் -

கொரோனா கிருமித்தொற்று சூழல் கருதி மக்களுக்கு இடையிலான தூர இடைவெளியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்துவதாக நேற்று (மார்ச் 20) அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இந்து அறக்கட்டளை வாரியம் அதன்கீழ் இயங்கும் அனைத்து கோவில்களிலும் புதிய கட்டுப்பாடுகளை உடனடியாக நடப்புக்குக் கொண்டு வந்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களிலும் மண்டபங்களிலும் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.

இதன்படி கோவில்களில் உடனே நடப்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு: - உடல் வெப்பநிலை சோதனை கோவிலுக்குள் செல்லும் அனைவரும் உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவர்களின் உடல் வெப்பநிலை 37.5 டிகிரிக்கு மேல் இருந்தால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும்.

- தகவல் சேகரிப்பு தொடர்புகளின் தடங்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிய கோவில்களுக்கு வருவோரின் விவரங்கள் சேகரிக்கப்படும்.

- பெருமளவிலான நிகழ்வுகள் ரத்து 250 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோரை ஈர்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

- ஒரு மீட்டர் இடைவெளி 250 பேருக்கும் குறைவானோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் ஒரு மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இடம் விட்டு அமர்வது, உணவு வேளைகளின்போது பிறருடன் உறவாடுவதைக் குறைத்துக்கொள்வது, வரிசையில் நிற்கும்போது இடைவெளி விடுவது போன்ற சூழல்களுக்கு இது பொருந்தும்.

- முதியோருக்கான அறிவுறுத்தல் கோவில்களிலும் விழாக்களிலும் கூட்ட நெரிசல் ஏற்படும் நாட்களில் வருவதைத் தவிர்த்திடுமாறு முதியோருக்கு ஆலோசனை வழங்கப்படும்.

நடப்புக்கு வரக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பொதுமக்களுடன் தினசரி தொடர்பில் வரும் கோவில் ஊழியர்களையும் பாதுகாப்பது முக்கியம். இதன்படி அர்ச்சகர்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள இடைவெளியை அதிகரிப்பதற்கு கோவில்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பக்தர்களுக்கு அருகில் செல்லாமல் அச்சகர்கள் அர்ச்சனையையும் ஆரத்தியையும் கருவறையில் இருந்தவாறு செய்யலாம்.

விபூதி, குங்குமம், தீர்த்தம், சந்தனம், மலர்கள் போன்றவற்றைத் தருவதை நிறுத்திக்கொள்ளலாம்.

பூக்கள், பால் போன்றவற்றைப் பக்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்தலாம்.

கோவிலில் பிரசாதம் வழங்கப்படுவதற்குப் பதிலாக அவை பொட்டலங்களாக தரப்படலாம்.

வாகன பூசைகள் மற்றும் தனிப்பட்ட பொருள்களைக் கருவறையில் வைத்து ஆசிர்வாதம் பெறுவது நிறுத்தப்படலாம்.

குறிப்பிட்ட சில பூசைகளை இணையம் வழி நேரடியாக ஒளிபரப்பும் சாத்தியத்தைக் கோவில்கள் கருதலாம்.

பிறந்தநாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் என அனைத்து நிகழ்வுகளுக்கான சிறப்பு பூசைகளும் நிறுத்தப்படலாம்.

வகுப்புகள், பயிலரங்குகள், கலாசார நிகழ்ச்சிகளை ரத்து செய்திடலாம்.

இனி வரும் நாட்களில் சுகாதார அமைச்சின் அறிவிப்புகளின் அடிப்படையில் இந்து அறக்கட்டளை வாரியம் புதிய அறிவுறுத்தல்களை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

#சிங்கப்பூர் #கொரோனா #HEB

குறிப்புச் சொற்கள்