வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் வருவதற்கான அனுமதி பெறாமல் வந்தது, வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய தேவைகளை மீறியது போன்றவற்றின் தொடர்பில் நேற்று (மார்ச் 21) வரை 89 பேரின் வேலை அனுமதிச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவர்களில் 73 பேர், கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றவர்கள். சிங்கப்பூருக்கு திரும்புவதற்கு முன்பு மனிதவள அமைச்சின் அனுமதியைப் பெறத் தவறியவர்கள்.
இந்த நாடுகளிலிருந்து திரும்பியவர்கள் சிங்கப்பூருக்கு வந்த பிறகு 14 நாட்களுக்கு வீட்டிலேயே தங்க்கியிருக்க வேண்டிய தேவை இருந்தது.
வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய ஆணை அல்லது விடுப்பில் இருக்க வேண்டிய ஆணையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வேறு 16 பேரின் வேலை அனுமதிச் சீட்டுகள் ரத்தாகின.
சிலர் அவர்களுடைய வேலையிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது; மற்றவர்கள், தங்களைத் தங்கியிருக்கச் சொன்ன இடத்திலிருந்து வெளியே சென்றவர்கள்.
விதிமுறைகளை மீறியவர்களில் பெருபாலானோர் ,விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் மாதத்தில் மீறியவர்கள். அத்தகையோரின் எண்ணிக்கை இரண்டாவது மாதத்தில் நான்காகக் குறைந்தது.
வேலை அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூரில் வேலை செய்ய முடியாது.
இந்த ஊழியர்கள் பணியாற்றி நிறுவனங்கள் விதிமுறைகளை ஊழியர்கள் முறையாகப் பின்பற்றுவதைக் கண்காணிக்காததால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு வேலை அனுமதிச் சீட்டு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் ஊழியர்கள் வருவதற்கு முன்பு அவர்களது நிறுவனங்கள் மனிதவள அமைச்சிடமிருந்து முறையான அனுமதி பெறுவது, இங்கு திரும்பும் ஊழியர்கள் விதிமுறைகளின்படி வீட்டில் அல்லது விடுப்பில் இருக்க வேண்டிய தேவையைப் பூர்த்தி செய்வது போன்ற நடவடிக்கைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சு அறிவுறுத்தியது.
மீறும் நிறுவனங்கள், ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
#சிங்கப்பூர் #கொவிட்-19 #வெளிநாட்டு ஊழியர்