கொவிட்-19 கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசாங்கம் நேற்று (மார்ச் 24) மாலை அறிவித்தது.
அதன்படி, திரையரங்குகள், மதுபானக்கூடங்கள், டிஸ்கோ மற்றும் கரவோக்கே கேளிக்கைக் கூடங்கள் உள்ளிட்ட எல்லா பொழுதுபோக்குக் கூடங்களும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூடப்படும் என்று கொவிட்-19ஐ கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரிவித்தது.
இதுபோன்ற கூடங்களில் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடுவதால் கிருமி பரவும் அபாயத்தைத் தவிர்க்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நிலையான மக்கள் கூட்டத்தைக் கொண்டிராத சில்லறைக் கடைத்தொகுதிகள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட இதர பொதுக் கூடங்கள் திறந்திருக்கலாம்.
இருப்பினும் 16 சதுர மீட்டருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பங்கேற்பாளர்கள் இருப்பதை அவற்றை நடத்துவோர் உறுதி செய்ய வேண்டும்.
வேலையிடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு வெளியே பத்துப் பேருக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது என்பது மற்றொரு கட்டுப்பாட்டு நடவடிக்கை.
இந்த புதிய நடவடிக்கைகள் நாளை வியாழக்கிழமை இரவு 11.59 முதல் நடப்புக்கு வரும்.
நிலைமையில் ஏற்படும் முன்னேற்றத்துக்கு இணங்க ஏப்ரல் 30 என்னும் காலவரம்பு மேலும் நீட்டிக்கப்படலாம்.
#சிங்கப்பூர் #கொவிட்-19 #பள்ளி #துணைப்பட வகுப்பு #திரையரங்கு #கேளிக்கைக்கூடம்