‘பாதுகாப்பான இடைவெளி’ நடைமுறையைப் பின்பற்றாத 30க்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு உடனடி வேலை நிறுத்த ஆனையை வழங்கியுள்ள்து மனிதவள அமைச்சு.
கடந்த வாரத்தில் நான்கு நாட்களுக்கு அமைச்சின் அதிகாரிகள் 100க்கு மேற்பட்ட நிறுவனங்களில் சோதனைகள் நடத்தியதையடுத்து, 34 வேலை நிறுத்த ஆணைகளையும் 36 குறை களைவு ஆணைகளையும் அமைச்சு வழங்கியிருந்தது.
இந்த நிறுவனங்கள் “உடனடியாக சரிப்படுத்த” வேண்டி இருப்பதாக இன்று (மார்ச் 27) குறிப்பிட்ட அமைச்சு, மற்ற நிறுவனங்களும் அண்மைய ஆலோசனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றது.
இந்த அரசாங்க ஆணைகளின்படி. நிறுவனங்கள் அனைத்து வேலையிட நிகழ்வுகளையும் தள்ளிவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
சாத்தியமானால் அந்த நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை வீடுகளிலிருந்து வேலை செய்யுமாறு கோர வேண்டும். அது முடியாதபட்சத்தில் ஊழியர்கள் மாறுபட்ட வேலை நேரங்களில் பணிக்கு வருவது, பாதுகாப்பான இடைவெளிகளில் அமர்வது ஆகியவற்றுக்கான வழிமுறைகளை நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
சிறந்த நடைமுறைகளைப் பற்றி நிறுவனங்களுக்கு கற்றுக்கொடுப்பதும் முக்கியம் என்று மனிதவள அமைச்சின் கண்காணிப்பாளர் திரு ரேமாண்ட் கோ கூறினார்.
“ஊழியர்களை, அவர்களது குடும்பத்தாரை மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க மற்ற நிறுவனங்கள் பின்பற்றக்கூடிய சிறந்த நடைமுறைகளை நிறுவனங்களுக்கு எடுத்துரைக்கிறோம். அமலாக்க நடவடிக்கைக்கும் மேல், குறைபாடுகளை நிறுவனங்கள் புரிந்துகொண்டு அவற்றைச் சரிசெய்து, வேலையிடங்களில் கொவிட்-19 கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
#சிங்கப்பூர் #பாதுகாப்பான இடைவெளி #வேலை நிறுத்த ஆணை