கொவிட்-19 கொள்ளைநோய் வர்த்தகங்களைப் பெருமளவு பாதித்துள்ள நிலையில், கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பங்கேற்ற 3% நிறுவனங்களில் சம்பளக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் 5% நிறுவனங்களில் சம்பளக்குறைப்பு பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளதாக மெர்சர் தெரிவித்துள்ளது.
உற்பத்தித்துறை, சில்லரை வர்த்தகம் மற்றும் மொத்த விற்பனை, வங்கி, ஆற்றல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இதற்கிடையே, 11 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊதிய உயர்வைக் குறைத்துள்ளன; மேலும் 22 விழுக்காட்டு நிறுவனங்களும் அவ்வாறு செய்ய ஆலோசிக்கின்றன என மனிதவள ஆய்வு நிறுவனமான ‘மெர்சர் சிங்கப்பூர்’ இன்று (ஏப்ரல் 1) தெரிவித்தது.
ஆய்வில் பங்கேற்றா 232 நிறுவனங்களில் 1 விழுக்காட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதாகவும் 22 விழுக்காட்டு நிறுவனங்கள் இவ்வாண்டு வேலைக்கு ஆள் சேர்ப்பதை நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளன.
“வேலைக்கு ஆளெடுப்பதற்கென ஒதுக்கப்படும் வரவுசெலவுத் திட்டம் குறைக்கப்படும் வேளயில், நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க கடப்பாடு கொண்டுள்ளன. பொறுப்புணர்வுடன் ஆட்குறைப்பு செய்வதன் தொடர்பிலான அரசாங்கத்தின் கடுமையான தர நிலைகள் மற்றும் மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலை ஆதரவு நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாக இது இருக்கிறது,” என்று மெர்சர் சிங்கப்பூர் நிறுவனத்தின் வாழ்க்கைத்தொழில் உருவாக்கங்கள் துறையின் தலைவர் குலாபலீ டோபிங் கூறினார்.
கடந்த வாரம் தேசிய சம்பள மன்றம் வெளியிட்ட அதன் வருடாந்திர பரிந்துரைகளில், “கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் முதலில் ஊதியமல்லாத மற்ற செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கு முன்பு அரசாங்கம் வழங்கும் ஆதரவுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; ஆட்குறைப்பு நடவடிக்கை கடைசித் தீர்வாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டது.
சென்ற மாதம் 9 முதல் 15ஆம் தேதி வரை மெர்சர் நடத்திய ஆய்வில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சொத்துச் சந்தை, கட்டுமானம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஊதிய உயர்வுக்காக ஒதுக்கப்படும் தொகையைப் பெருமளவு குறைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்தத் துறைகளில் உள்ள நிறுவனங்களின் வரவுசெலவுத் திட்டத்தில் சராசரியாக 4.1 முதல் 3.3 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து கருவிகள் துறையில் 4 முதல் 3.5 விழுக்காடு வரை வரவுசெலவுத் திட்டத்தைக் குறைத்துள்ளன. சில்லரை வர்த்தகம் மற்றும் மொத்த விற்பனைத் துறையில் 3.5 முதல் 3.1 விழுக்காடு, தளவாடங்கள் துறையில் 3.6 முடல் 3.2 விழுக்காடு வரை குறைத்துள்ளன.
#சிங்கப்பூர் #சம்பளம் #ஆட்குறைப்பு