சிங்கப்பூரில் உள்ள தாதிமை இல்லங்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு, ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை ஆகியவை நேற்று (ஏப்ரல் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
இம்மாதம் 30ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள அனைத்து தாதிமை இல்லங்களிலும் பார்வையாளார்களுக்கு அனுமதி இல்லை.
தாம்சன் லேனில் உள்ள லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் ஹோமில் 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிருமித்தொற்று ஏற்பட்டவர்களில் 102 வயதான மூதாட்டி உட்பட 9 பேர் இல்லவாசிகள்.
இல்லவாசிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இந்தத் தடை வருத்தமளிப்பதாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மைபயக்க வேண்டும் என்பதற்கு இத்தகைய வசதிக்குறைவு தேவை என்று தாதிமை இல்லங்களை நடத்துவோர் குறிப்பிட்டனர்.
ஈகான் ஹெல்த்கேர் குழுமம் தீவு முழுவதும் உள்ள அதன் 7 இல்லங்களில் பார்வையாளர்களுக்குத் தடை விதிப்பதாக நேற்று அறிவித்தது.
இல்லவாசிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் இந்தத் தடைக்கு அதிகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அந்தக் குழுமத்தின் தலைமை நிர்வாகியும் தலைவருமான திரு ஓங் சு போ கூறினார்.
இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு ஈகான் குழுமத்தின் இல்லவாசிகளை வாரம் ஒரு முறையாவது பார்வையிடுமாறு குடும்பத்தார் ஊக்குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.