கொரோனா கிருமி பரவலினால் மின்தூக்கி பொத்தான்களை் அழுத்துவதற்கு தங்கள் சாவி அல்லது பிற பொருள்களைப் பயன்படுத்தி வரும் வீவக குடியிருப்பாளர்கள் இனிமேல் நிம்மதியடையலாம்.
மூன்று மாதங்களுக்கு கிருமியை அண்டவிடாத ரசாயனப் பூச்சு அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக மின்தூக்கிகளிலும் மின்தூக்கி கூடங்களிலும் அடிக்கப்படவுள்ளது.
எஸ்டிஎஸ்டி எனப்படும் இந்தப் பூச்சு பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் அதில் படும்போது அவற்றைக் கொன்றுவிடும்.
மேலும், தேய்த்துக் கழுவிச் சுத்தம் செய்தாலும் பூச்சு இருக்கும். ஏனெனில், இதிலுள்ள ரசாயனப் பொருட்கள் பூசப்படும் தளத்தில் இறுகப்பிடித்துக்கொள்ள உதவுகிறது.
இது வழக்கமான கிருமிநாசினிகளைப் போன்ற திரவ வடிவத்தில் மேற்பரப்பில் தெளிக்கப்படுகிறது. இது மனித தோலுக்கு பாதுகாப்பானது.
சாங்கி விமான நிலையக் குழுமத்தின் பரோபகார பிரிவாக சாங்கி அறக்கட்டளை 650 லிட்டர் எஸ்டிஎஸ்டி திரவத்தை நன்கொடை அளித்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் 16 நகர மன்றங்களைச் சேர்ந்த குழுவினர் கடந்த இரு வாரங்களில் மின்தூக்கிகளில் இதனைப் பூசினர்.
சிங்கப்பூரின் 26,000 வீவக மின்தூக்கிகளில் உள்ள 1.5 மில்லியன் மின்தூக்கி பொத்தான்களில் பூசுவதற்கு இந்த அளவு போதுமானது.
சிங்கப்பூரின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் பேர் வீவக வீடுகளில் வசிப்பதாகவும், குடியிருப்புப் பேட்டைகளில் மின்தூக்கி பொத்தான்களே அடிக்கடி தொடப்படும் இடம் என்றும் மக்கள் செயல் கட்சியின் 15 நகர மன்றங்களுக்கான ஒருங்கிணைப்புத் தலைவரான டாக்டர் தியோ ஹோ பின் கூறினார்.
இதனை மற்ற பொது இடங்களிலும் பயன்படுத்த திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, “குடியிருப்பாளர்கள் மிகவும் கவலை கொண்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். தொடக்கத்தில் மின்தூக்கி பொத்தான்கள் போன்ற அதிக ஆபத்துள்ள மேற்பரப்புகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்று டாக்டர் தியோ கூறினார்.
இப்போது பூச்சு பூசப்பட்டு இருப்பதால், குடியிருப்பாளர்கள் சாவி போன்ற கடினமான பொருட்களால் மின்தூக்கி பொத்தான்களை அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பூச்சுகளை பாதிக்கக்கூடும் என்றார் அவர்.
#சிங்கப்பூர் #மின் தூக்கி பொத்தான்களுக்கு ரசாயனப் பூச்சு