இம்மாதம் 15ஆம் தேதி வரை முஸ்தஃபா நிலையம் மூடல்

இம்மாதம் 15ஆம் தேதி வரை முஸ்தஃபா நிலையம் மூடல்

3 mins read
64b85c1a-d011-41c9-9fd9-02a54778a9fc
முஸ்தஃபா கடைத்தொகுதி 2003ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கி வந்துள்ளது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

கொவிட்-19 கிருமித் தொற்று பரவிவரும் வட்டாரமாக நேற்று (ஏப்ரல் 2) முஸ்தஃபா செண்டர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கடைத்தொகுதி இன்று மூடப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி அந்தக் கடைத்தொகுதியின் 11 ஊழியர்களுக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இம்மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு வரையில் கடைத்தொகுதியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

முஸ்தஃபா செண்டரில் மொத்தம் 1,650 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

"ஊழியர்களைத் தொடர்புகொள்ள கடைத்தொகுதியின் மனிதவளப் பிரிவினர் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிவருகின்றனர்," என்று மனிதவளப் பிரிவின் மேலாளர் திரு முகம்மது கவுஸ் தெரிவித்தார்.

முஸ்தஃபா கடைத்தொகுதி 2003ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கி வந்துள்ளது.

"நான் பணிபுரியும் வளாகத்திலேயே இந்தக் கிருமித் தொற்று ஏற்பட்டு பரவிவரும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எங்கோ நடந்த சம்பவமாகவே நினைத்து வந்தேன். என் சக ஊழியர்களும் அவ்வாறே நினைத்தனர்," என்று கூறினார் கடந்த சுமார் பத்தாண்டுகளாக அங்கு பணிபுரியும் திரு பாஸ்கர்.

"முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுயமாக எடுத்து வந்தேன். அச்சம் என்பது இதுவரை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது இத்தனை பேருக்கு பரவிவிட்டது என்பதை அறிந்தவுடன் பயமாகத்தான் இருக்கிறது," என்று கூறிய அவர், அடுத்த சில நாட்கள் தன் வீட்டின் அறையிலேயே இருக்கப்போவதாகக் கூறினார்.

"வீட்டில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு தேவை. எனது இரு குழந்தைகளும் கணவரும் என் நிலையைப் பார்த்து கவலைகொள்ளும் பட்சத்தில் நான் அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

"அதனால் இயன்றவரை பாதுகாப்பான இடைவெளியுடன் வீட்டில் தனித்து இருப்பேன்," என்று கூறினார் மற்றோர் ஊழியர் திருவாட்டி ‌‌ஷர்மிளா பானு.

"தொடர்ந்து 24 மணி நேர சேவை வழங்கி வரும் அந்நிறுவனம் சையத் ஆல்வி சாலையையே மக்கள் எந்நேரமும் கூட்டம் கூட்டமாக நடமாடும் சாலையாக உருவெடுக்க வைத்தது" என்று கூறினார் முஸ்தஃபாவிற்கு எதிரில் சையத் ஆல்வி சாலையில் கடை நடத்தும் திரு அப்துல் அஜீஸ்.

"இன்று ஒரு நாள் வெறிச்சோடி கிடக்கும் சாலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை," என்றார் அவர்.

நாள் முழுதும் வேலை பார்ப்போருக்கு இரவில் பொருள் வாங்க நல்ல வாய்ப்பை நல்கிவந்தது முஸ்தஃபா.

"முஸ்தஃபா செண்டரில் மட்டுமே நான் எனது அன்றாட உணவுப் பொருட்களையும் மளிகைப் பொருட்களையும் வாங்கி வருகிறேன். திடீரென கடை மூடப்பட்ட நிலையில் நான் வேறு மாற்று வழிகளைப் பார்க்கவேண்டும்," என்று கூறினார் இரு பகுதி நேர வேலைகளைச் செய்துவரும் திரு வேலாயுதம்.

கடைத்தொகுதி என்பதைவிட வீட்டிற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் விற்கும் பேரங்காடியாகவும் விளங்கும் முஸ்தஃபா மூடப்பட்டது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், காய்கறி போன்ற நீண்ட ஆயுள் இல்லாத பொருட்களை முஸ்தஃபா செண்டர் சையத் ஆல்வி சாலையின் கடைசியில் உள்ள தமது மற்றொரு கடைவீடு வளாகத்தில் மலிவு விலையில் விற்றது.

நேற்று காலை முதல் மலிவு விலையில் பொருட்கள் விற்கப்பட்டதாக அறியப்படுகிறது.

"$10 கொடுத்து எவ்வளவு காய்கறி வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. பாதுகாப்பாக சுவாசக் கவசம் அணிந்து நான் வாங்கி வந்தேன்" என்றார் திரு சிவா.

#சிங்கப்பூர் #முஸ்தஃபா

குறிப்புச் சொற்கள்