வேலை ஆதரவுத் திட்டம் மேம்படுத்தப்படும் என்றும் இந்த மாதத்திற்கான வெளிநாட்டு ஊழியர் தீர்வை ரத்து செய்யப்படும் என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்திருப்பது, தொழில்நிறுவனங்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என துணைப் பிரதமர் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக இன்று (ஏப்ரல் 4) தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகள், பொருளியலுக்கு முக்கியமான துறைகள் தவிர்த்து பெரும்பாலான பணியிடங்கள் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு, அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மூடப்படும் என பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் அறிவித்தார். அதேபோல பள்ளிகளும் வரும் புதன்கிழமையிலிருந்து மூடப்படவுள்ளன.
“பல்வேறு நிறுவனங்களும் இவ்வார இறுதியில் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதில் தீவிரமாக இருக்கும். அவர்களின் கவலைகளை நான் அறிந்துள்ளேன்,” என்றார் நிதியமைச்சருமான திரு ஹெங்.
இந்தக் காலகட்டத்தில் நிறுவனங்களுக்கான ஆதரவை அதிகரிப்பது குறித்து தமது அமைச்சுக் குழுவுடனும் மற்ற அரசாங்க அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நாளை தாம் அமைச்சர்நிலை அறிக்கையை வாசிக்கும்போது அந்த விவரங்களை அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 5) தமிழ் முரசு நாளிதழை நாடுங்கள்! சிரமமான காலகட்டத்தில் செய்திகளைத் தொடர்ந்து அறிந்துகொள்ள தமிழ் முரசு நாளிதழின் சந்தாதாரராகுங்கள்! தமிழ் முரசு அச்சுப் பிரதி உங்கள் வீடுகளுக்கே விநியோகிக்கப்படும். மேல் விவரங்களுக்கு இணையப்பக்கத்தை நாடுங்கள்!