கிருமிப் பரவலை முறியடிக்க புதிய நடவடிக்கைகள்; முதல்நாளில் வெறிச்சோடிய கடைத்தொகுதிகள், காலியான தெருக்கள், கூட்டமே இல்லாத ரயில்கள்

கிருமிப் பரவலை முறியடிக்க புதிய நடவடிக்கைகள்; முதல்நாளில் வெறிச்சோடிய கடைத்தொகுதிகள், காலியான தெருக்கள், கூட்டமே இல்லாத ரயில்கள்

2 mins read
bf0010ce-4548-45e4-90aa-5ebf72599b87
ஆளரவமற்ற ராபிள்ஸ் பிளேஸ். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிக்க பிரதமர் லீ சியன் லூங் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த நடவடிக்கைகள் இன்று நடப்புக்கு வந்துள்ள நிலையில் ரயில்கள், ரயில் நிலையங்கள், உணவங்காடிக் கடைகள், சாலைகள், கடைத்தொகுதிகள் என திரும்பிய பக்கமெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன.

பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று பள்ளிகள் திறந்திருந்தன. நாளை முதல் மாணவர்களுக்கு வீட்டிலேயே இருந்து கல்வி கற்கும் நடைமுறை தொடங்குகிறது.

ஈரச்சந்தைகள், உணவங்காடிக் கடைகள், உணவகங்கள் போன்றவை திறந்திருந்தாலும் பொருட்களை வாங்கிகொண்டு வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய சூழல்; உணவகங்களில் அமர்ந்து உணவருந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரச்சந்தைகளிலும் உணவகங்களிலும் பணி புரிவோர் அமர்ந்து சாப்பிட இடம் கண்டுபிடிப்பது சவாலாகிப்போனது.

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி 1,375 பேரைப் பாதித்துள்ள கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.

வங்கிகள் போன்ற அத்தியாவசிய நிதிச் சேவைகள் செயல்பாட்டில் இருப்பதால் மத்திய வர்த்தக வட்டாரத்தில் சிலர் நடமாடுவதைக் காண முடிந்தது.

வீட்டில் இருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களுக்காக வீட்டிலேயே சமைக்க வாங்கும் பொருட்களின் அளவும் அதிகரித்துள்ளது.

இதே நிலை நீடித்தால் உணவகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று கிம் மோ உணவு நிலையத்தில் மீன் சூப் கடைக்காரர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

தீவு முழுவதும் பல்வேறு அரசாங்க முகவைகளைச் சேர்ந்த மொத்தம் 2,600 அதிகாரிகள் பாதுகாப்பான இடைவெளி தூதுவர்கள், அமலாக்க அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிடோக் பேருந்து நிலையத்தில் உள்ள உணவங்காடி நிலையத்தில் மதிய உணவு இடைவேளையின்போது மக்களை பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு சில அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

"இந்த இடம் பொதுவாக கூட்டமாக இருக்கும். மிகவும் வித்தியாசமாக உள்ளது. வீடுகளுக்குள்ளேயே இருப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தாலும் இத்தகைய நடவடிக்கை அவசியமகிறது," என்று 19 வயதான பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் லோ சியூ மிங் கூறினார்.

பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கடைத்தொகுதிகள் மிகவும் அமைதியாகக் காணப்படுகின்றன.

ஆர்ச்சர்ட் கடைத்தொகுதிகள், ஜூரோங் ஈஸ்டில் இருக்கும் ஜெம், வெஸ்ட்கேட், ஜேகியூப் கடைத்தொகுதிகள், சிராங்கூனின் நெக்ஸ் கடைத்தொகுதி போன்றவற்றிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே மக்கள் நடமாட்டம் தென்பட்டது.

பொதுவாக மிகுந்த பரபரப்புடன் காணப்படும் சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆட்களே இல்லை. இன்று காலையில் மாணவர்கள் ரயில்களில் பயணம் செய்ததாகக் குறிப்பிட்ட வாடிக்கையாள் சேவை அதிகாரி ஒருவர், நாளை முதல் அவர்களையும் காண முடியாது என்றார்.

சிங்கப்பூரின் இந்த அசாதாரண நிலை கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரத் துணைபுரியும் என்று நம்பப்படும் வேளையில் நாமும் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருந்து கிருமிப்பரவலைத் தடுக்க நம்மால் ஆன முயற்சியைச் செய்வோம்!

குறிப்புச் சொற்கள்