வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வளாகங்களில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று இன்று (ஏப்ரல் 8) சுகாதார அமைச்சு அறிவித்தது. இந்த நடவடிக்கை நாளை நள்ளிரவு 11.59 முதல் நடப்புக்கு வரும்.
எந்த நாட்டிலிருந்து வந்தாலும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகாலம் தங்க அனுமதி அட்டை வைத்திருப்போர் ஆகிய அனைவருக்கும் இந்த விதிமுறை நீட்டிக்கப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆசிய நாடுகள், இந்தியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு இந்த நடைமுறை முன்பு நடப்பில் இருந்தது.
சிங்கப்பூருக்குள் வரும் அனைவரும் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
அவர்களுக்கு தனி அறைகள், கழிவறைகள் போன்றவை ஒதுக்கப்படுவதுடன் உணவும் வழங்கப்படும். இதன் மூலம் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர்.
தற்போது இத்தகைய வசதிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் அனைத்து நாடுகளிலிருந்தும் சிங்கப்பூருக்கு வருவோரை இவ்வாறு தங்க வைக்க முடியும் என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
ஒருவேளை, எதிர்பார்க்கப்படுவதைவிட அதிகமானோர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தால், பின்னர், அபாய அளவை ஆய்வு செய்து அதற்கேற்ப சில நாடுகள், பிரதேசங்களிலிருந்து வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
வெளிநாடுகளிலிருந்து ஏற்கெனவே சிங்கப்பூருக்குத் திரும்பியிருப்பவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கும் உத்தரவை நிறைவு செய்வர்.
"ஏற்கெனவே அறிவித்தபடி, கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் சிங்கப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று விட்டு பின்னர் நாடு திரும்புவோர், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் வளாகங்களில் தங்க வைப்பதற்கான முழுச் செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

