சிங்கப்பூரில் உள்ளூர் நிறுவனங்கள் அடுத்த ஆறு முதல் 24 மாதங்களில் முட்டை, கீரை, மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்காக புதிதாக $30 மில்லியன் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த மானியம், கூடுமான வரையில் விரைவாக உள்ளூர் உணவு உற்பத்தியை வேகப்படுத்த உதவும் என்று சிங்கப்பூர் உணவு முகவையும் சுற்றுப்புற, நீர்வள அமைச்சும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கின்றன.
சிங்கப்பூருக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களில் 30 விழுக்காட்டை 2030ஆம் ஆண்டுக்குள் இங்கேயே உற்பத்திச் செய்ய வேண்டும் என்பது இலக்காக உள்ளது.
நீண்டகால போக்கில் சிங்கப்பூருக்குத் தேவைப்படும் உணவு வளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் இந்த இலக்கை நிர்ணயித்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக புதிய மானியம் இடம்பெறுகிறது.
இந்த மானியம் தொடர்பான அறிவிப்பு இம்மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும்.
முட்டை, கீரை, மீன் உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்தியைப் பெருக்கவும் வேகப்படுத்தவும் தங்களிடம் உள்ள திட்டங்களைத் தாக்கல் செய்து மானியத்தைப் பெறலாம்.
அடுத்த ஆறு முதல் 24 மாதங்களில் அத்தகைய நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்குச் செலவிடும் தொகையில் ஒரு குறிப்பிடத்தக்கப் பகுதி மானியமாகக் கிடைக்கும்.
முட்டை, கீரை, மீன் மூன்றும் சிங்கப்பூரில் அதிகம் பயன்படுத்தப்படும் பொதுவான உணவுப் பொருட்களாகும்.
2019 ஆண்டின் நிலவரப்படி, இங்கு பயன்படுத்தப்பட்ட கீரை வகைகளில் 14 விழுக்காட்டை உள்ளூர் நிறுவனங்கள் இங்கேயே உற்பத்தி செய்தன. முட்டைகளில் 26 விழுக்காடும் மீனில் 10 விழுக்காடும் உள்நாட்டில் உற்பத்தியாயின.
உள்ளூரில் உணவு உற்பத்தியை மேலும் பெருக்கும் வகையில் இந்த முகவையும் அமைச்சும் இன்னும் பல தொழில்துறை இடங்களையும் காலி நிலங்களையும் அடையாளம் காணும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 9) அச்சுப் பிரதியை நாடுங்கள்!
நீங்கள் சந்தாதாரரானால் தமிழ் முரசு நாளிதழ் வீடுகளுக்கே விநியோகிக்கப்படும். இ-பேப்பரும் வாசிக்கலாம். மேல் விவரங்களுக்கு: https://www.sphsubscription.com.sg/eshop/?r=products/newsubscriptionpackages&pcode=tm