கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவதற்கான உத்தேசச் சட்டம் (மசோதா) கொண்டு வரப்பட்டு உள்ளது.
கிருமிப் பரவல் காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் வீட்டில் தங்கி இருக்கும் உத்தரவு போன்ற தடைகளால் பாதிக்கப்படும் வாக்காளர்கள் தங்களது தேர்தல் தொகுதிக்கு வெளியில் வாக்களிக்க, பரிந்துரைக்கப்பட்ட சட்டம் அனுமதிக்கும்.
உடல்நிலை பாதிக்கப்படும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் தினத்தன்று நேரடியாகச் செல்லாமலேயே வேட்பு மனுவைப் பதிவு செய்யவும் அச்சட்டம் வழிவகுக்கும்.
வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த ‘நாடாளுமன்றத் தேர்தல் (கொவிட்-19 சிறப்பு ஏற்பாடுகள்) மசோதா’வில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் இவை.
கிருமிப் பரவல் காலத்தில் பாதுகாப்பான முறையில் பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் தேவையான தற்காலிக ஏற்பாடுகளைச் செய்ய மசோதா இடமளிக்கும்.
மேலும் வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது பொது சுகாதாரத்தைப் பேணுவதற்கான சிறப்பு நடவடிக்கைகளும் இந்த மசோதாவில் இடம்பெற்று உள்ளன.
மன்றத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு திரு சான் சார்பில் தேர்தல் துறை பதிலளித்தது.
“அடுத்த பொதுத் தேர்தலுக்கான இடையேற்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மசோதா. பொதுத் தேர்தல் நடத்தப்படும் காலத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை,” என்று தேர்தல் துறை கூறியது.
“கொரோனா கிருமித்தொற்று பரவல் உட்பட நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்தலை எப்போது நடத்தலாம் என்ற முடிவை பிரதமர் லீ சியன் லூங் எடுப்பார்.
“கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் அதிமுக்கிய பணியில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவுவதே நமது உடனடி முன்னுரிமைகள். அதில் ஒன்றுதான் நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான இந்த உடனடி நடவடிக்கைகள்,” என்று தேர்தல் துறை கூறியது.
இதற்கிடையே, சிங்கப்பூரில் ஜூன் மாதம் பொதுத்தேர்தல் இடம்பெறலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.
மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்த மசோதா நிறைவேற வேண்டியது அவசியம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் நடப்புக்கு வந்துள்ள புதிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கிருமிப் பரவல் குறைந்தால், தேர்தல் நடத்துவதற்கு சாத்தியமுள்ள முதல் காலகட்டம் ஜூன் மாதம் என்று பேராசிரியர் டான் குறிப்பிட்டுள்ளார்.