அனைத்து எம்ஆர்டி ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள், நேருந்து நிறுத்தங்கள், பேருந்து சந்திப்பு நிலையங்கள் ஆகியவற்றில் படிப்படியாக பாதுகாப்பான இடைவெளியைக் குறிக்கும் ஒட்டுவில்லைகள் ஒட்டப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (ஏப்ரல் 9) தெரிவித்தது.
எந்த இடத்தில் அமரக்கூடாது, எந்த இடத்தில் நிற்கலாம் என்பதைக் குறிக்கும் ஒட்டுவில்லைகள் அங்கு ஒட்டப்பட்டிருக்கும்.
“ஒட்டுவில்லைகள் குறிக்கும் பாதுகாப்பான இடைவெளியை பயணிகள் பின்பற்ற வேண்டும்,” என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டது.
இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படுவதை போக்குவரத்து தூதுவர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் ஆகியோர் உறுதிப்படுத்துவார்கள்.
உதாரணத்துக்கு அவர்கள் ரயில் நிலையங்களில் நுழையும் பயணிகளின் எண்ணிக்கையையும் பேருந்துகளில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துவார்கள்.
போக்குவரத்துத் தூதுவர்களாக செயல்படும் முன்னாள் டாக்சி ஓட்டுநர்களும் விமானச் சிப்பந்திகளும் படிப்படியாகப் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
அவர்களின் சுமார் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஆர்டி நிலையங்களில் இந்த வாரம் தங்கள் பயிணைத் தொடங்கி விட்டார்கள் என்றும் அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் பலர் அவர்களுடன் சேர்ந்துக்கொள்வார்கள் என்றும் ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஆர்டி நிலையங்களில் உடல்வெப்பக் கண்காணிப்புச் சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும். பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் நுழைவதற்கு முன் அவர்களின் உடல் வெப்பத்தைக் கண்காணிக்க கூடுதல் பாதுகாப்பு அரணாக இருக்கும்.
ஏற்றுக்கொள்ள முடியாத உடல் வெப்பத்தைக் கொண்டிருக்கும் பயணிகள் பொதுப் போக்குவரத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரைக் காண அவர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
உடல்வெப்பக் கண்காணிப்புச் சாதனங்களைப் பெறும் முதல் நிலையங்களாக சிராங்கூன், தியோங் பாரு ஆகியவை அமைந்துள்ளன.
“பயணிகள் அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைவூட்ட விரும்புகிறோம். பாதுகாப்பான இடைவெளி குறித்த நடைமுறைகள் உயர்ந்த நிலையில் இருக்கும் இவ்வேளையில், எல்லாரும் அவசியமில்லாத பயணங்களைத் தவிர்த்து வீட்டில் இருக்குமாறு வேட்டுக்கொள்கிறோம்.
“போக்குவரத்துத் தூதுவர்கள், ஆணையத்தின் அமலாக்க அதிகாரிகள் ஆகியோர் கூறும் ஆலோசனைகளைப் பயணிகள் பிற்பற்ற வேண்டும்,” என்றும் ஆணையம் வலியுறுத்தியது.
பொதுப் போக்குவரத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இப்போது சரிந்திருப்பதால், பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் சாத்தியமாகலாம் என்று கவனிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.