சிங்கப்பூரில் கொவிட்-19 சூழல் காரணமாக எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகளால் பலர் வீடுகளிலிருத்து வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக இங்கு குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினை குறித்து கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 6) நாடாளுமன்றத்தில் பேசினார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ. கிருமித்தொற்று காரணமாக நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளில் குடும்ப வன்முறை, குடும்ப சச்சரவுகள், சண்டைகள் போன்றவை அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய சிரமங்களை எதிர்நோக்குபவர்கள் உளவியல் நிபுணர்கள், ஆலோசகர்கள் போன்றோரிடம் ஆலோசனை பெறுவதற்காக தேசிய பராமரிப்பு நேரடி தொலைபேசி வசதி உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
குடும்ப வன்முறை சிறப்பு நிலையங்களும் குழந்தை பாதுகாப்பு சிறப்பு நிலையங்களும் “இந்தக் காலகட்டத்தில் போதுமான அளவுக்கு வளங்களுடன் வைக்கப்படும்,” என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 619 அழைப்புகளைப் பெற்றதாக ‘அவேர்’ எனப்படும் பெண்களுக்கான நடவடிக்கை மற்றும் ஆய்வு அமைப்பு தெரிவித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 35% அதிகம்.
“கொள்ளைநோய்ப் பரவல், பொருளியல் மந்தநிலை போன்ற நெருக்கடியான காலங்களில் பொதுவாக குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும்,” என்று அவேர் அமைப்பின் ஆய்வுப் பிரிவு தலைவர் ஷேலி ஹிங்கோரானி தி நியூ பேப்பரிடம் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்ததாக சமூகப் பணியாளர்கள் தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எப்போதும் ஒரே இடத்தில் இருக்கும் கட்டாயம் தற்போது ஏற்பட்டிருப்பதால் அத்தகைய குடும்ப வன்முறைகள் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று யுனைட்டட் வுமன் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் ஜார்ஜெட் டான் குறிப்பிட்டார்.
பாதிக்கப்படுபவர்கள் உதவி கோருவதும் சிரமம் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை இணைப் பேராசிரியர் தெரிவித்தார்.