நாட்டில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் அனைத்து பலதுறை மருந்தகங்களிலும் ஒரு சில தனியார் மருந்தகங்களிலும் கொவிட்-19 கிருமிக்கான சோதனைகளைச் செய்துகொள்ளலாம் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்துள்ளது.
பொது மருத்துவமனைகளில் தொடங்கி பின்னர் தனியார் மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், குறிப்பிட்ட சில தனியார் மருந்தகங்கள் ஆகிய இடங்களில் கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்விடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகள், முடிவுகள் வரும்வரை வீட்டுக்குச் சென்று காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவர் என்று கூறப்படுகிறது.
கொவிட்-19 சோதனை மாதிரிகள் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு கிருமித்தொற்று உறுதிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியானால் தொலைபேசி மூலம் உடனே நோயாளிக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதையடுத்து நோயாளியின் வீட்டுக்கு மருத்துவ வாகனம் அனுப்பப்படும். நோயாளியை அருகிலுள்ள பொது மருத்துவமனைக்கு வாகனம் கொண்டு செல்லும்.
தேசிய தொற்று நோய்த்தடுப்பு நிலையத்தில் அமைந்துள்ள தேசிய பொது சுகாதார ஆய்வுக்கூடம், கொவிட்-19 சோதனைகளை நடத்தும் பிரதான கூடமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தனியார் மருந்தகங்களில் உள்ள மருத்துவர்கள் கொவிட்-19 சோதனைகளை மேற்கொள்வது பெரும் உதவியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர். கிருமித்தொற்று சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிவதுடன் நோயாளிகளை உடனே தனிமைப்படுத்திவிடலாம் என்றனர்.
இருப்பினும் கிருமி தொற்றும் சாத்தியம் அதிகம் இருப்பதால் அனைத்து தனியார் மருந்தகங்களின் மருத்துவர்களும் சோதனைகளைச் செய்ய முன்வருவதில்லை என்று கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தனிநபர் பாதுகாப்புக் கருவிகளை அணிந்தவாறு மருத்துவர்கள் கொவிட்-19 சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது.
நோயாளியின் உடல்நிலை, வெளிநாட்டுப் பயண விவரங்கள், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடனான தொடர்பு ஆகியவற்றைக் கொண்டு கொவிட்-19 சோதனை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு முன்னரே தெரிவித்திருந்தது.


