வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தற்போதைய நிர்வாகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, ஊழியர்கள் சுயமாக தங்களுக்குச் சமைக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.
தங்கும் விடுதிகளின் தூய்மை மற்றும் மருத்துவ நிர்வாகங்களைப் பற்றி அமைச்சர் லாரன்ஸ் வோங் தொடர்பு, தகவல் அமைச்சில் நேற்று (ஏப்ரல் 9) நடைபெற்ற அமைச்சர்நிலை பணிக்குழுவினரின் செய்தியாளர் கூட்டத்தில் பேசியதை அடுத்து திருவாட்டி டியோ, தங்கும் விடுதிகள் குறித்து எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகளைப் பற்றி மேலும் விவரித்தார்.
மாறாக, அவர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படவேண்டும் என அவர் கூறினார். தங்குமிடங்களில் உள்ள தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை நிர்வகிக்கும் பணிகள் முற்றிலும் மாறுபட்ட அளவில் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.
உடல்நலம் சரியில்லாதோருக்கான ஓய்விடங்கள் (sick bay) அதிகரிக்கப்படும் என்றும் அவர். தெரிவித்தார்.
இந்த மாற்றங்களைச் செயல்படுத்த ஊழியர் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளுக்கு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பணிக்குழு கைகொடுக்கும் என்று கூறினார் திருமதி டியோ.
இவ்வாரம் திங்கட்கிழமையிலிருந்து செயலாற்றத் தொடங்கிய இந்தக் குழு, 'ஃபாஸ்ட்' என்றழைக்கப்படும் குழுக்களை அமைத்தது.
குறைந்து ஒன்பது பேர் கொண்ட ஒவ்வொரு குழுவும், தங்குமிட ஊழியர்களுடன் செயல்பட்டு வருவர். புதன்கிழமைக்குள் குறைந்தது 43 'ஃபாஸ்ட்' குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக திருவாட்டி டியோ கூறினார்.