சிங்கப்பூரில் மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்று கண்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையடுத்து, அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விரண்டையும் சேர்த்து இங்கு இதுவரை 7 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோச்ரேன் லாட்ஜ் 1, அகாசியா லாட்ஜ் ஆகிய இரண்டையும் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்துவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று (ஏப்ரல் 11) இரவு அறிவித்தார்.
இந்த விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் தங்கள் அறைகளிலேயே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நேற்று இரவு 11.59 மணியிலிருந்து இந்த நடைமுறை நடப்புக்கு வந்துள்ளது.
ஏற்கெனவே உள்ள கொரோனா கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடைய அந்த கோச்ரேன் லாட்ஜ் 1ல் கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 22. அட்மிரல்டியில் உள்ள இந்த விடுதியில் நேற்று புதிதாக 7 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெம்பனிஸ் தங்கும் விடுதி, சுங்கை தெங்கா லாட்ஜ், பொங்கோலில் உள்ள எஸ்11 தங்கும் விடுதி, வெஸ்ட்லைட் டோ குவான் மற்றும் டோ குவான் தங்கும் விடுதி ஆகியவை ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐந்து வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்.
நேற்று புதிதாக 191 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,299 ஆகியுள்ளது.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்கும் விடுதி, நார்த் கோஸ்ட் லாட்ஜ், காசியா@பெஞ்சுரு ஆகிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளும் புதிய கிருமித்தொற்று குழுமங்களாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.