கொரோனா கிருமி தொற்றுநோய் கால நெருக்கடிகளை குடும்பங்கள் சமாளிக்க உதவும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 10 சிங்கப்பூரர்களில் ஒன்பது பேருக்கு நாளை $600 கிடைக்கும்.
வயது வந்த சிங்கப்பூரர் ஒவ்வொருவருக்கும் $100 முதல் $300 வரை அளிக்கப்படும் என்று பிப்ரவரி மாதம் அரசாங்கம் அறிவித்தது. மார்ச் மாதம் இந்த வழங்கீட்டுத் தொகை $300 முதல் $900 வரை மும்மடங்காக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையில் இத்தொகை வழங்கப்படுவதாக இருந்தது.
நிதியமைச்சருமான திரு ஹெங், அந்த வழங்கீட்டுத் தொகையில் 300 வெள்ளி முன்னதாகவே ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் என்றும் அதனுடன் மேலும் $300ஐ கூடுதலாக ஒருமைப்பாட்டுக்கான வழங்கீட்டில் இருந்து அளிப்பதாகவும் திங்கட்கிழமை அறிவித்தார்.
அதிகமான வழங்கீட்டுத் தொகைக்குத் தகுதி பெறுவோர் ஜூன் மாதத்தில் மேலும் $300 அல்லது $600ஐ பெறுவார்கள்.
கடந்த 2018ஆம் ஆண்டில் எஸ்ஜி போனஸ் உட்பட முன்னதாக வழங்கீடுகளைப் பெற்றவர்களில் சுமார் 90 விழுக்காட்டினரின் வங்கிக் கணக்கு விவரங்களை அரசு பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 10 விழுக்காடு சிங்கப்பூரர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பாதுகாப்பான அரசாங்க இணையத்தளமான https://go.gov.sg/spsc மூலம் ஏப்ரல் 23ஆம் தேதிக்கு முன்னர் அளிக்குமாறு நிதி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
படிவத்தைப் பூர்த்தி செய்ய சிங்பாஸ் கணக்கு தேவை.
சிங்கப்பூர் குடியுரிமையுள்ள மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர்களைக் கொண்ட 2020ல் 21 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய நிரந்தரவாசிகள் ஒருமுறை வழங்கப்படும் நிதியாக $300 பெறுவர். சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கும் 21 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய நீண்டகால வருகை அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கும் இத்தொகை கிடைக்கும்.
இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல்13) அச்சுப் பிரதியை நாடுங்கள்!
நீங்கள் சந்தாதாரரானால் தமிழ் முரசு நாளிதழ் வீடுகளுக்கே விநியோகிக்கப்படும். இ-பேப்பரும் வாசிக்கலாம். மேல் விவரங்களுக்கு: https://www.sphsubscription.com.sg/eshop/?r=products/newsubscriptionpac…