கொவிட்-19 கொள்ளைநோய் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாள்தோறும் குடித்துக்கொண்டிருக்கும் வேளையில், சிலர் இந்த நெருக்கடியை தங்களுக்குச் சாதகமான சூதாட்டத்துக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
சட்டவிரோத சூதாட்ட இணையத் தளங்கள் சிங்கப்பூர் உட்பட மற்ற நாடுகளின் சூதாட்ட ஆர்வலர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
அவை நாள் தோறும் ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் கிருமித்தொற்று சம்பவங்களை மையமாக வைத்து சூதாட்ட ஆர்வலர்களைப் பந்தயம் கட்ட அழைக்கின்றன.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஒவ்வொரு நாளும் பதிவாகவுள்ள கிருமித்தொற்று சம்பவங்களின் கடைசி எண்ணை வைத்து பந்தயம் கட்டப்படுகிறது.
அத்துடன் அந்தக் கடைசி எண் ஒற்றை எண்ணா, இரட்டை எண்ணா என்றும் முந்தைய நாளின் எண்ணிக்கையைவிட அன்றைய நாளின் எண்ணிக்கை ஏற்றமா, இறக்கமா என்றும் பல்வேறு வகைகளில் பந்தயம் கட்டப்படுகிறது என்று ‘த நியூ பேப்பர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ இயக்கப்படும் சட்டவிரோத சூதாட்டத்தளச் சேவைகளை வழங்குவோருக்கு எதிராக $200,000 வரை அபராதம், ஐந்தாண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பதை போலிஸ் நினைவூட்டியுள்ளது.