இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம், தாய்லாந்து ஆகிய ஐந்து தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டில் -1.3% என எதிர்மறையாக இருக்கலாம் என்று தனது திருத்தப்பட்ட முன்னுரைப்பில் அனைத்துலகப் பண நிதியம் தெரிவித்து இருக்கிறது.
“பெரிய ஆசியான் நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. அவை சுற்றுலாத் துறை, வர்த்தகம், உற்பத்தி, நிதிச் சந்தைகள் போன்ற துறைகளில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன,” என்று அனைத்துலகப் பண நிதியத்தின் ஆசியா, பசிபிக் வட்டாரங்களுக்கான இயக்குநர் சாங்யோங் ரீ கூறியுள்ளார்.
குறிப்பாக தாய்லாந்து பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இவ்வாண்டில் தாய்லாந்தின் பொருளியல் வளர்ச்சி -6.7% என்ற அளவிற்குக் கீழேஇறங்கலாம் என்று திரு ரீ குறிப்பிட்டுள்ளார்.
கம்போடியா, லாவோஸ், மியன்மார் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் கொரோனா கிருமிப் பரவல் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், உலகளவில் கிருமித்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் அந்த நாடுகளின் ஏற்றுமதியும் சுற்றுலா சார்ந்த துறைகளும் குறிப்பிடத்தக்க இடையூறைச் சந்திக்கும் என அனைத்துலகப் பண நிதியம் கணித்துள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் கொள்கை விரிவாக்கம் எதிர்பாராத ஒன்று எனத் தெரிவித்த திரு ரீ, ஆனாலும் இந்த எதிர்பாராத தருணத்தில் அது தவிர்க்க முடியாதது என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்காக சிங்கப்பூர் 59.9 பில்லியன் வெள்ளியை ஒதுக்கியிருக்கிறது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% என்பது குறிப்பிடத்தக்கது.
“வழக்கமான வர்த்தகத்திற்கு இது நேரமல்ல. சுகாதாரப் பரமாரிப்புத் துறைக்கு ஆதரவளித்து, பாதுகாத்து, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தவும் கிருமி மேலும் பரவாமல் தடுக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
“கிருமிப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பொருளியலைக் கடுமையாகப் பாதித்துள்ளன. குடும்பங்கள், நிறுவனங்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. உண்மையில் இதுதான் பொருளியல் அதிர்ச்சி,” எனக் குறிப்பிட்ட திரு ரீ, நேரடி உதவிகள் மூலம் மக்களை, வேலைகளை, நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.