லாரி, டாக்சி, கார் ஆகிய 3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் லாரி ஓட்டுநரான ஆடவர் உயிரிழந்தார்; மூவர் காயமடைந்தனர்.
நேற்றிரவு (ஏப்ரல் 21) சிராங்கூன் நார்த் அவென்யூ 1, இயோ சூ காங் ரோடு, ஃபிலிப்ஸ் அவென்யூ ஆகிய சாலைகளின் சந்திப்பில் நேர்ந்த இந்த விபத்து குறித்து இரவு 9.07 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
அசைவின்றிக் கிடந்த 58 வயது லாரி ஓட்டுநர் உயிரிழந்ததை சம்பவ இடத்திலேயே துணை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக போலிஸ் குறிப்பிட்டது.
லாரியில் பயணம் செய்த 50 வயது மாது, டாக்சி ஓட்டுநரான 56 வயது ஆடவர், டாக்சியில் பயணம் செய்த 57 வயது மாது ஆகியோர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுய நினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
லாரி அதன் ஒரு பக்கத்தில் கவிழ்ந்திருந்ததையும் அருகில் ஒரு நீல நிற போலிஸ் கூடாரம் இருந்ததையும் சமூக ஊடகங்களில் பரவிய படங்கள் காட்டின; விசாரணை தொடர்கிறது.