சவூதி அரேபியாவில் அனைத்து வர்த்தக விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கிருந்து 85 சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர்வாசிகள் சிங்கப்பூருக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்கள் தாயகத்துக்குத் திரும்புவதற்காக மீட்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று (ஏப்ரல் 24) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ரியாத்திலுள்ள சிங்கப்பூர் தூதரக அதிகாரிகளும் ஜெத்தாவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரும் இந்த மீட்பு நடவடிக்கைகளை அங்கிருந்து ஒருங்கிணைத்தனர்.
இன்று காலை அவர்கள் 85 பேரும் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவில் பயிலும் 40 மாணவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் இந்தக் குழுவில் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படும் வளாகங்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றது அமைச்சு.
சிங்கப்பூர்வாசிகள் பாதுகாப்பாக திரும்பி வர உதவிய சவூதி அரசாங்கத்துக்கு சிங்கப்பூர் அரசாங்கம் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.