தேசிய தண்ணீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் ஒரு புதிய விதமான 'பாதுகாப்பான இடைவெளி தூதரை' பணியில் இறக்கியுள்ளது.
360 டிகிரி சுற்றுப்புறத்தைப் படம் பிடிக்கும் கேமராக்களுடன் நான்கு சக்கரங்களில் வலம் வரும் அது, மக்களை பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிக்கச் சொல்லவும் வீட்டிலேயே இருங்கள் என்று அறிவுறுத்தவும் சலிப்படைவதில்லை.
ஆம்.
O-R3 என்று அழைக்கப்படும் தானியங்கி இயந்திர மனிதன் பிடோக் ரிசர்வோரில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பூங்காவில் கொவிட்-19 பரவலைக் குறைக்கும் நோக்கில் இம்மாதம் 23ஆம் தேதி முதல் இந்த இயந்திரத்தை கழகம் பயன்படுத்தி வருகிறது.
"கொவிட்-19 பரவலைத் தடுக்கும் பொருட்டு, கூட்டங்களுக்கு இந்தப் பூங்காவில் அனுமதி இல்லை. தயவுசெய்து பாதுகாப்பான இடைவெளியை எல்லா நேரங்களிலும் கடைப்பிடியுங்கள்; பூங்காவில் சுற்றித் திரிய வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள்; வீட்டிலேயே இருங்கள்," என்று பொருள்படக்கூடிய வாசகங்களை நான்கு மொழிகளிலும் அந்த இயந்திர மனிதன் ஒலிபரப்புவதைக் கேட்க முடிகிறது.
கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் நடப்பில் உள்ள நிலையில், உணவுப் பொருட்கள் வாங்குதல், மருத்துவமனைக்குச் செல்வது, அத்தியாவசியச் சேவையில் ஈடுபடுவோர் பணிக்குச் செல்வது ஆகியன மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் பூங்காக்களில் தொடர்ந்து மக்கள் கூட்டத்தைக் காண முடிவதால் அதிகாரிகள் அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றனர்.
இம்மாதம் 11ஆம் தேதி முதல் கடற்கரைகள் மூடப்பட்டன; இயற்கை வனப்பகுதிகள் மற்றும் பூங்காக்கள் போன்றவை 22ஆம் தேதி முதல் மூடப்பட்டன.
வெளியில் சுற்றித் திரிவோரை வீட்டிலேயே இருக்குமாறு நினைவூட்ட புதிய வழிமுறையாக O-R3 பணியில் இறக்கப்பட்டுள்ளது.
ஒட்ஸா எனும் உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதன், ஒரு சிறிய வாகனம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் பொருத்தப்பட்டுள்ள உணர்கருவிகள், கேமரா ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நிலைமையைக் கண்காணித்து அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்ப முடியும்.
மக்கள் அதிகம் காணப்படக்கூடிய காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த இயந்திர மனிதன் ரோந்து பணியில் ஈடுபடுகிறது. பண்டான் ரிசர்வோர், மெக்ரிட்சி ரிசர்வோர் ஆகியவற்றிலும் இதுபோன்ற இயந்திர மனிதர்கள் பணியில் அமர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த இயந்திர மனிதன் கண்காணிப்புப் பணிகளில் உதவுவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் பிடோக் ரிசர்வோரில் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
கிருமித்தொற்று கண்டவர்களை, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் தகவல் தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் மேம்பட்ட வகையில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
சமூகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் உணவு, மருந்துகளை வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

