வெஸ்ட்லைட் பாப்பான் வெளிநாட்டு ஊழியர் விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை உள்துறை அமைச்சர் அமைச்சர் கா. சண்முகம் சந்தித்து உரையாடியதாகக் குறிப்பிட்ட வெளிநாட்டு ஊழியர் நிலையம், காணொளி ஒன்றையும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.
கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும், விடுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் ஊழியர்களின் அக்கறைகள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் நோக்கில் அங்கு சென்றிருந்தார் அமைச்சர் என்று அந்தப் பதிவு குறிப்பிட்டது.
(முழு காணொளியைக் காண முழுத்திரை பொத்தானை அழுத்தவும்.)
சம்பளம், உணவு, மருத்துவப் பராமரிப்பு போன்றவை வழங்கப்படுவதுடன், ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் தொடர்புகொள்ளவும் வசதிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் ஊழியர்களிடையே உறுதி அளித்தார்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு நல்குவதற்காக ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.
எளிதானதல்ல என்பதைப் புரிந்துகொண்டாலும் விதிமுறைகளைப் பின்பற்றி வசிப்பிடத்திலேயே இருக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொருவரும் தம் பங்கை ஆற்றினால், நாம் ஒன்றிணைந்து இந்தச் சூழலைக் கடந்துவிடுவோம் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார் என்றது பதிவு.