‘முறைத்துப் பார்த்த’ சம்பவத்துக்காக, கூட்டம் சேர்த்துக்கொண்டு இருவரைத் தாக்கிய விக்னேஷ் சித்ராசு எனும் 23 வயது இளையருக்கு 20 மாதங்கள் மற்றும் 8 வாரங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் கையில் வெட்டுப்பட்டார்; மற்றவருக்கு முகத்தில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன; மூன்றாமவரின் செவிப்பறை பாதிக்கப்பட்டது.
ஏற்கெனவே ஒருவரைத் தாக்கியதற்காக சிறை சென்று, பிணையில் வெளிவந்திருந்தபோது இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார் விக்னேஷ்.
தொல்லைகொடுத்தது, வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்தது உட்பட மூன்று தாக்குதல் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
தகராறு ஒன்று மூண்டதில் மற்ற குழுவைச் சேர்ந்த சில ஓடித் தப்பிவிட்டனர். அதன்பிறகு விக்னேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திரு கோபிநாதன் வைத்திலிங்கம், திரு ஸ்ரீதர்சா சிவநாதன் ஆகிய இருவரையும் சரமாரியகத் தாக்கினார். தாக்கப்பட்ட இருவருக்கும் அப்போது 29 வயது.
போலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டது; டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரு கோபிநாதனின் முகத்தில் காயங்கள் இருந்ததும் வலது கண்ணுக்கு அருகில் எலும்பு முறிவு ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
திரு ஸ்ரீதர்சாவின் செவிப்பறை பாதிக்கப்பட்டது; முகத்திலும் சிராய்ப்புக் காயங்கள் இருந்தன.
சம்பவத்தின் தொடர்பில் வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வேறு ஒரு சம்பவத்தில் ஃபேரர் பார்க் ரோட்டில் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மதுவருந்திய பிறகு போலிசார் ஒருவர் மீது தகாத வார்த்தைகள் பேசி விக்னேஷ் தொல்லை கொடுத்தார்.
வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியன விதிக்கப்பட்டிருக்கலாம்.