கொரோனா கிருமியை அழிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய பொருட்களாக விளம்பரம் செய்யப்படும் அனைத்தும் கிருமியை முற்றிலுமாக அழித்துவிடுவதில்லை; அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அந்த ரசாயனங்களின் செறிவு, சரியான முறையில் பயன்படுத்துவது போன்றவற்றைப் பொறுத்து, அவற்றின் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று (மே 22) தெரிவித்தது.
கொரோனா கிருமித்தொற்று கண்டவர்கள் இருக்கும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது அவசியமாகிறது.
தொற்று கண்டவர்கள் தொடும் தளங்கள் மற்றும் இடங்களில் Sars-CoV-2 கிருமிகள் இருப்பதற்கான சாத்தியம் அதிகம். அவை அந்தப் பொருட்களின் மீது 2 முதல் 3 நாட்கள் வரை இருக்கக்கூடும் என்று ஆய்வகப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
கிருமிநாசினியை தெளிப்பதைவிட கிருமிநாசினி உள்ள திசுத்தாள்கள் அல்லது துணியால் துடைப்பதே கிருமிகளைத் துடைத்தொழிக்க சிறந்த வழி என்று கூறப்படுகிறது. கிருமிகளை அழிக்கக்கூடிய ரசாயனப் பொருட்களின் செறிவு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டியது அவசியம்; மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அந்த ரசாயனம் செயல்பட வேண்டியதும் அவசியம் என்று கூறப்படுகிறது.
ஆன்டிபாக்டீரியல் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் வைரஸ் கிருமிகளை அழிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Mr Muscle பலபயன் சுத்திகரிப்பான், Dettol கிருமிநாசினி திரவம் போன்றவற்றில் இருக்கும் பென்சால்கோனியம் குளோரைடு, சோடியம் ஹைப்போகுளோரைட் போன்ற ரசாயனங்கள் கொரோனா கிருமிகளை அழிப்பதில் திறம்பட செயல்படுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
கிருமிநாசினிகளை கடைகளில் வாங்கும்போது அவற்றில் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்ற ரசாயனங்களின் செறிவு போதிய அளவுக்கு இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து வாங்குமாறு வாரியம் குறிப்பிட்டுள்ளது. வாரியத்தின் இணையப்பக்கத்தில் இது தொடர்பான ஆலோசனைக் குறிப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
கொரோனா கிருமியை அழிப்பதில் திறம்பட செயல்படும் பொருட்களின் பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online