தாதிமை இல்லவாசிகள், பாலர் பள்ளி பணியாளர்கள் ஆகியோரிடையே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவர்களில் சிலருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் இன்னும் பலர் கிருமித்தொற்றால் பாதிக்கப்படக்கூடிய சூழல் இருப்பதாக பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீமெய்யில் உள்ள ஆரஞ்சு வேலி தாதிமை இல்லவாசிகள் நால்வருக்கும் தீவின் பல்வேறு பகுதிகளில் பாலர் பள்ளி பணியாளர்கள் ஐவருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த வியாழக்கிழமை சுகாதார அமைச்சு அறிவித்தது.
கடந்த புதன்கிழமை நிலவரப்படி, 16,000 தாதிமை இல்லவாசிகளிடையே 10,200 பேருக்கு கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாலர் பள்ளி பணியாளர்கள் 30,000 பேரிடையே 10,400 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தாதிமை இலவாசிகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது அக்கறைக்குரிய அம்சம் என்றும் அவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டால் அவர்களது உடல்நலப் பிரச்சினைகள் தீவிரமடையும் வாய்ப்பு அதிகம் என்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் தொற்று நோய்களுக்கான திட்டத்தின் தலைவரான இணைப் பேராசிரியர் சு லி யாங் குறிப்பிட்டார்.
“பாதுகாப்பான இடைவெளி நடைமுறை, கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை பாலர் பள்ளி மாணவர்களிடையே நடைமுறைப்படுத்துவது, மூத்த மாணவர்களிடையே அவற்றை நடைமுறைப்படுத்துவதைவிட சிரமம்,” என்று ஆலிவர் வைமன் நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி கிட்டி லீ கூறினார்.
அதனால், பணியாளர்களுக்கு அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொள்ளவும், தேவை ஏற்பட்டால் பரவலைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.