சிங்கப்பூரில் பயணிகள் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த பெண் ஓட்டுநர் ஒருவர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு கதறி அழுவதைக் கண்ட சிலர் அவருக்கு உதவ முன்வந்தனர்.
“ஏதேனும் பிரச்சினையா, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” என்று கேள்விகளை எழுப்பியவாறு உதவிக்குச் சென்றார் ஓர் ஆடவர்.
பேருந்தின் கதவைத் திறக்குமாறு ஓட்டுநரிடம் கேட்டுக்கொண்ட அந்த ஆடவர், “ஏன் அழுகிறீர்கள்?” என்றார்.
தொடர்ந்து அழுத அந்தப் பெண், விம்மல்களுக்கிடையே, தனது கணவர் இறந்துவிட்டதாக கைபேசி வழி தகவல் கிடைத்ததாகக் கூறினார்.
இந்தச் சம்பவங்களைக் காட்டும் காணொளி ஒன்று FabricationsAboutThePAP ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
இரு ஆடவர்கள் பேருந்துக்குள் வந்த அந்த ஓட்டுநரை சமாதானப் படுத்தியதை அந்தக் காணொளியில் காண முடிந்தது.
பின்னர், டவர் டிரான்சிட் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த ஓட்டுநரின் கண்காணிப்பாளருடன் பேருந்தில் இருந்த தொடர்பு வசதி வழியாகத் தொடர்புகொண்ட அந்த ஆடவர்கள், விஷயத்தை விளக்கி, உதவிக்கு ஆட்களை அனுப்புமாறு கோரினர்.
அதனைத் தொடர்ந்து, உதவி வரும் வரை அங்கேயே இருந்த அந்த ஆடவர்கள், அந்த ஓட்டுநர் பருக பானம் ஒன்றும் வாங்கி வந்து கொடுத்து உதவினர்.
அந்த ஓட்டுநரின் கணவர் மலேசியாவில் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. கொவிட்-19 சூழல் காரணமாக மலேசியாவுக்குச் செல்வோர் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
அந்தப் பெண் தம் கணவரை ‘அனுப்பி வைக்க’ அங்கு செல்ல முடியுமா என்பதும் தெரியவில்லை!