கொவிட்-19 கிருமிப் பரவலால் உணவுக் கடைகள் மூடவிருப்பதாக ஃபேஸ்புக் தளத்தில் பொய்த் தகவல் பதிவிட்ட 40 வயதுடைய டாக்சி ஓட்டுநர் கென்னத் லாய் யோங் ஹுய்க்கு இன்று (மே 27) நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உணவுப் பொட்டலப் பொருட்களால் கிருமி பரவுவதாகவும் உணவங்காடி மற்றும் காப்பிக் கடைகள் மூடப்பட உள்ளதாகவும் தனது வாட்ஸ்அப் குழு ஒன்றில் ஏப்ரல் 15க்கும் 16க்கும் இடையே குறுஞ்செய்தி ஒன்றைக் கண்டதாக லாய் கூறினார். இருப்பினும் செய்தியை அனுப்பியவரை அவரால் பின்னர் அடையாளம் காண முடியாததுடன் லாயின் தொலைபேசியிலும் அச்செய்தியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
செய்தி உண்மையானதா என்பதை உறுதிசெய்யாமல், சுமார் 7,500 உறுப்பினர்கள் கொண்ட ‘டாக்சிஅங்கல்’ ஃபேஸ்புக் குழுவின் பக்கத்தில் அந்தப் பொய்த் தகவல்களை லாய் பகிர்ந்துகொண்டார்.
உணவு வியாபாரங்கள் மூடப்படுவதாக பதிவில் குறிப்பிட்ட லாய், பேரங்காடிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அடுத்த மாதத்திற்குத் தேவையான பொருட்களை உடனே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.
மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அச்செய்தி பொய் என்பதை லாய் அறிந்திருந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டதை அடுத்து, இத்தகைய பொய்த் தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனச் சிலர் கருத்து கூறியிருந்ததைக் கண்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து லாய் தன் பதிவை அகற்றிவிட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் லாயின் பதிவு குறித்து போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
டாக்சி ஓட்டுநரான லாய், இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பொய்த் தகவல் பரப்புவதாகவும் சக சிங்கப்பூரர்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் புகார் அளித்தவர் விவரம் அளித்திருந்தார்.
இன்று பொய்த் தகவலைப் பரப்பிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட லாய், தனது தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன் மிகவும் வருந்துவதாகவும் கூறினார்.
இருப்பினும் லாயின் தண்டனை மூலம் இத்தகைய பொய்த் தகவல்களைப் பரப்பக்கூடாது என்பதைப் பிறர் உணரவேண்டும் என்பதற்காக நீதிபதி நான்கு மாதச் சிறைத் தண்டனை விதித்தார்.
தொற்று நோய் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததற்காக இன்று (மே 27) 27 வயது குயுரேஷ் சிங்குக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வீட்டிலேயே இருக்க் வேண்டிய உத்தரவை மீறி அவர் தான் பாதுகாவல் அதிகாரியாகப் பணிபுரியும் மரினா பே சேண்ட்சுக்கு வேலைக்குச் சென்றதாகவும் தன்னுடைய சொந்த வீட்டிற்குப் பதிலாக தன் மூன்று வேலை நண்பர்களுடன் தங்கியிருந்த தற்காலிக இடத்திற்குப் போனதாகவும் கூறப்பட்டது.
அதேபோல் ஸஹாரி சாமாட், 60, வீட்டில் இருக்கும் உத்தரவை மீறி வெளியே சென்று உணவும் சிகரெட்டும் வாங்கியதாகக் கூறப்பட்டது.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் மலேசியரான அர்வினிஷ் ராமகிருஷ்ணன், 23, மீதும் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
நண்பருடன் மது அருந்தியதுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அர்வினிஷ் ராமகிருஷ்ணன், போக்குவரத்துப் போலிசிடம் சிக்கியதாகக் கூறப்பட்டது. அடுத்த மாதம் 3ஆம் தேதியன்று அர்வினிஷுக்கும் ஸஹாரிக்கும் தண்டனை விதிக்கப்படும்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online