கொவிட்-19 சூழல் ஏற்படுத்தி இருக்கும் நிச்சயமற்ற போக்கு காரணமாக பல வர்த்தகங்கள் ஆட்சேர்ப்பை தள்ளிவைத்துள்ளன. அதன் காரணமாக ஊழியர் சந்தை நலிவடைவது போல தோன்றுகிறது.
சிங்கப்பூர் முதலாளிகளின் அடுத்த காலாண்டிற்கான ஆட்சேர்ப்பு கண்ணோட்டம் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக மோசமானதாக உள்ளதென 'மேன்பவர் குருப்' ஆட்சேர்ப்பு நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூலைக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக இந்நிறுவனத்தின் ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 38 விழுக்காடு தெரிவித்தன.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனம் இங்குள்ள 266 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டது.
அதேநேரம் ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக 11 விழுக்காட்டு நிறுவனங்கள் கூறின.
ஆட்குறைப்பு, ஆட்சேர்ப்பு என எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என 46 விழுக்காட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எதிலும் உறுதி இல்லை என்பது ஐந்து விழுக்காட்டு நிறுவனங்களின் கருத்து.

