சிங்கப்பூரில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகு, முதல்கட்டமாக சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான ‘கட்டுப்படுத்தப்பட்ட தகவல்களை’ அவற்றை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே கசியவிட்டதாக அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலுவலக ரகசியங்கள் சட்டம் 5(1)ன் கீழ், தவறான தகவல் தொடர்பு குற்றத்தின்கீழ் 50 வயதான சிங்கப்பூர் ஆடவர் நேற்று (ஜூன் 13) கைது செய்யப்பட்டார்.
அதிரடித் திட்டத்துக்குப் பிறகான அரசின் திட்டங்கள் பற்றிய தகவல் ‘வாட்ஸ்அப்’ சமூக ஊடகத்தில் பொதுமக்களிடையே பரவி வருவதாக போலிசுக்கு நேற்று முன்தினம் தெரியவந்தது.
அந்த கட்டுப்படுத்தப்பட்ட தகவலைப் பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள அந்த ஆடவர், தனிப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் அந்தத் தகவலைப் பகிர்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது; விசாரணை தொடர்கிறது.
கட்டுப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெற அங்கீகரிக்கப்படாதவர்களுக்குப் பகிர்வதை அரசாங்கம் கடுமையானதாகக் கருதுவதாக போலிஸ் தெரிவித்தது.
இத்தகைய தவறான தகவல் தொடர்புகளுக்கு ஈராயிரம் வெள்ளி வரை அபராதம் ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தத் தகவலைப் பெற அங்கீகாரம் பெறாதவர்கள், அதனைப் பகிரக்கூடாது என்றும், அவ்வாறு பகிர்வோரும் இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online