ஃபேரர் ரோடு, கேலப் பார்க் ரோடு ஆகியவற்றின் சந்திப்பில் நேற்று (ஜூன் 16) காலை நிகழ்ந்த விபத்தில் 51 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றுக்கு இடையே நிகழ்ந்த இந்த விபத்தின் தொடர்பில், அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாக, காரின் ஓட்டுநரான 55 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்தின் காரணமாக குவீன்ஸ்வேயை நோக்கிச் செல்லும் தடத்தில் ஃபேரர் ரோட்டில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மஞ்சள் வண்ண கார், அருகில் நீல வண்ண போலிஸ் கூடாரம் ஆகியவற்றைக் காட்டும் படத்தை வாசகர் ஒருவர் ஸ்டோம்ப் இணையப்பக்கத்துக்கு அனுப்பினார்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் நேற்று காலை 9.58 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததை சம்பவ இடத்திலேயே துணை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online