கொவிட்-19லிருந்து மீண்ட பிறகு, சிங்கப்பூரின் பொருளியல் மீட்சிக்கு வழிகாட்டுவதற்கான சிறப்புப் பணிக்குழு விரைவாகச் செயல்படும் வகையில் சிறிய அளவில் கச்சிதமாக இருக்க வேண்டி இருக்கிறது என்று அந்தக் குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 சூழ்நிலைக்கும் உலகப் பொருளியலில் அதனால் ஏற்படக்கூடிய மாற்றங்களின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இருந்தாலும், அந்தச் சிறப்புப் பணிக்குழு பலதரப்பட்ட பன்மய ஈடுபாட்டை மிக முக்கியமாகக் கருதுகிறது என்று அவர் கூறினார்.
அந்தக் குழுவில் 17 பேர் உறுப்பினர்கள். அதற்கு அப்பாலும் பலரின் ஈடுபாட்டையும் பலரின் கருத்துகளையும் எண்ணங்களையும் யோசனைகளையும் அக்குழு வரவேற்பதாக திரு லீ தெரிவித்தார்.
தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகளிடம் இருந்து வந்துள்ள பல யோசனைகள் ஊக்கம் அளிப்பவையாக இருக்கின்றன என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான திரு லீ குறிப்பிட்டார்.
கொவிட்-19 பாதிப்பிலிருந்து பொருளியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் ஒரே மக்களாக வலுவாக மீண்டு வர சிங்கப்பூர் பரந்த அளவில் முயற்சிகளைத் தொடங்கி இருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர் லீ, அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சிறப்பு பணிக்குழுச் செயல்படுவதாகக் கூறினார்.
அந்தப் பணிக்குழுவில் சிறுபான்மை அமைப்புகள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள், சுற்றுச்சூழல் ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த மேலும் பலர் இடம்பெறலாம் என்று கடிதம் ஒன்றில் யோசனை தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் லீ இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
அந்தக் கடிதம், இந்த வாரம் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற நியமன உறுப்பினர்கள் அந்தியா ஓங், வால்டர் திசெய்ரா ஆகியோரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பேராளர்களும் அடங்கிய 45 பேர் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தனர்.
கொவிட்-19 காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்போர் சிங்கப்பூரின் மறுநிர்மாணத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
சிங்கப்பூர் சமூகத்தின் இதர பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ஈடுபாடு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று ஏற்கெனவே திரு லீ குறிப்பிட்டு இருந்தார். அதை இன்று (ஜூன் 18) அவர் மறுபடியும் உறுதிப்படுத்தினார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online