வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிங்கப்பூரில் உள்ள வர்த்தக சங்கங்கள் $500,000க்கும் அதிகமான தொகையைத் திரட்டியுள்ளன.
கொவிட்-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்தத் தொகை உதவும் என்று சிறிய, நடுத்தரத் தொழில்கள் சங்கம் இன்று (ஜூன் 18) தெரிவித்தது.
இந்தத் தொகையில் 77 வர்த்தகங்கள், சிறிய, நடுத்தர தொழில்கள் சங்கடத்துடன் தொடர்புடைய தனிமனிதர்கள் வழங்கிய $300,000மும் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் வழங்கிய $200,000மும் அடங்கும்.
இந்தத் தொகை வெளிநாட்டு ஊழியர் மையத்தின் உதவி நிதிக்கு அளிக்கப்படும்.
தங்கும் விடுதி, உணவு, அன்பளிப்புத் தொகை போன்றவற்றுக்கும் சம்பள பிரச்சினைகளில் சிக்கிய அல்லது வேலையிடத்தில் காயமடைந்த ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதும் இந்த உதவி நிதி பயன்படுகிறது.
வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் சங்கம் ஜூன்12ஆம் தேதி அன்று இந்த முயற்சியைத் தொடங்கியது.
நிதி திரட்டின் நிறைவையொட்டி நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், “இது ஒரு மிக முக்கியமான திட்டம், வெளிநாட்டு ஊழியர்கள் நமது நாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்,” என்றார்.
“பெரும்பான்மையான சிங்கப்பூரர்கள் அவர்களை மதிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் அரசாங்கம், சமூகம், அரசு சாரா அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு உதவ ஒன்றிணைந்துள்ளதைக் காணமுடிகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online