சிங்கப்பூரில் பொதுப்போக்குவரத்து நிறுவனங்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்களால் பயணிகளுக்கு கிருமிப் பரவல் நிகழவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று (ஜூன் 18) தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்து மூலம் கிருமிப் பரவல் நிகழ்ந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விக்கு சுகாதார அமைச்சு பதிலளித்தது.
இம்மாதம் 2ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் முதல் கட்டமாகத் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் காலை உச்ச நேரத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது.
இன்று முதல் இரண்டாம் கட்ட தளர்வுகள் நடப்புக்கு வந்துள்ள நிலையில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுப்போக்குவரத்துப் பயணத்தின்போது ஏற்படும் தொடர்புகள் மிகக் குறுகிய காலத்தவை என்றும் அந்தக் காலகட்டத்தில் கொரோனா கிருமிப் பரவல் நிகழும் அபாயம் குறைவு என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பயணிகள் நல்ல சுகாதார பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து மேற்கொண்ள்வது அவசியம் எனத் தெரிவித்த அமைச்சு, ‘டிரேஷ் டுகெதர்’ செயலியைப் பயன்படுத்துமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டது.
இதற்கிடையே, பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் துப்புரவு பணிகளை மேம்படுத்துவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online