புதிய கிருமித்தொற்று குழுமம் ஒன்று துவாசில் எண் 10 டெக் பார்க் கிரசென்டில் அமைந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நேற்று (ஜூன் 18) அறிவிக்கப்பட்டது.
அந்தக் குழுமத்தில் இருவருக்கு நேற்று கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது. அந்தக் குழுமத்தில் ஏற்கெனவே இருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 257 பேரையும் சேர்த்து சிங்கப்பூரின் கிருமித்தொற்று எண்ணிக்கை 41,473 ஆனது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட, உள்ளூர் சமூகத்துடன் வசிக்கும் நால்வரில் ஒருவர் நிரந்தரவாசி மற்ற மூவரும் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.
அந்த வேலை அனுமதிச்சீட்டு கொண்ட அனைவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை.
கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட 38 வயது நிரந்தரவாச ஆடவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை. அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் செய்யும் முன்னெச்சரிக்கை பரிசோதனைகளில் அவருக்கு கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நால்வரில் மூவருக்கு முன்பு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் கிருமித்தொற்றைப் பரப்பும் நிலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online