பொய்யான பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றி தெரிவித்து $570,000 மோசடி செய்த ஒரு கும்பலுடன் தொடர்பில் இருந்ததுடன் அவற்றுக்கு ஒப்புதல் வழங்கிய சுங்கத்துறை அதிகாரி ஒருவருக்குக் கையூட்டு கொடுத்த 41 வயது முத்துவேல் சங்கருக்கு நேற்று (ஜூன் 18) 18 மாதச் சிறை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் $66,891 வரியைத் தண்டப் பணமாகச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
ஊழல் தொடர்பான இரு குற்றச்சாட்டுகள், ஜிஎஸ்டி மோசடி தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் தொடர்பில் ஒரு குற்றச் சாட்டு ஆகியவற்றை சங்கர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிப்பின்போது மேலும் ஆறு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
“பயணத்துறை நடுவமாக விளங்கும் சிங்கப்பூரில் இது போன்ற குற்றங்களைத் தடுக்கவில்லை என்றால், அது பொதுமக்கள் நிதியிருப்புக்கு எத்தகைய பாதிப்புகளை விளைவிக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்,” என்றார் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் செயலாக்கப் பிரிவு இயக்குநர் திரு சின் வீ லியாம்.
2012 செப்டம்பருக்கும் 2014 ஜனவரிக்கும் இடையில் நான்கு இந்திய நாட்டவர் பொய்யான ஜிஎஸ்டி கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததை அப்போது சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றிய முகம்மது யூசோஃப் அப்துல் ரஹ்மான் எனும் சுங்கத்துறை அதிகாரி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அதற்காக அந்த நால்வர் யூசோஃபுக்கு கையூட்டு தொகையை பல முறை கொடுத்தனர்.
குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது சங்கர் இந்தியாவில் இருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமக்கு எதிராக எதுவும் நடந்துவிடாது என்று எண்ணி, கடந்த ஆண்டு அக்டோபரில் சங்கர் ஒரு சுற்றுப்பயணியாக சிங்கப்பூருக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். சங்கரின் நான்கு நண்பர்கள் 2014 ஜனவரியில் கைதாகினர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online