சிங்கப்பூரில் இன்று (ஜூன் 25) நண்பகல் நிலவரப்படி புதிதாக 113 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,736 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 5 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்; நால்வர் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.
இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட எழுவரில் ஒருவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் பணியாற்றும் தாதி.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக அந்த 31 வயது ஆடவர் பணிக்குச் சென்றிருந்ததாக அமைச்சு தெரிவித்தது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு சிங்கப்பூரர் 66 வயதான ஆடவர். அவர் ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரிபவர். அவர் தி லியோ தங்கும் விடுதி கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர்.
வேலை அனுமதிச்சீட்டு கொண்ட ஐவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவர் அத்தியாவசியச் சேவைகளில் இடுபடுவோர்; ஒருவர் ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரிபவர்.
மற்ற இருவர் நேற்று புதிதாக அறிவிக்கப்பட்ட இரு புதிய கிருமித்தொற்று குழுமங்களில் ஒன்றான கெப்பல் ஷிப்யார்டில் பணிபுரிவோர்.
பைனியரில் இருக்கும் கெப்பல் ஷிப்யார்ட் கொரோனா தொற்று குழுமத்தில் இதுவரை மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எண் 52 டெக் பார்க் கிரசென்டில் உள்ள துவாஸ் தங்கும் விடுதி 7 கிருமித்தொற்று சம்பவங்களுடன் புதிய கிருமித்தொற்று குழுமமாக நேற்று அறிவிக்கப்பட்டது.
விடுதிகளில் தங்கியிருக்கும் 184 ஊழியர்களுக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று ஏற்படுவது கடந்த வாரத்தில் சராசரியாக 4ஆக உயர்ந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 7ஆக இருந்தது.
அதே போல, முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த இரு வாரங்களாக 2ஆக இருந்து வருகிறது.
நேற்று மேலும் 304 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 36,288 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்; கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக நீடிக்கிறது.
உலக அளவில் இதுவரை 9.51 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 483,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online