தம் மனைவியின் மகளுக்கு பாலியல் விஷயங்களில் இருந்த ஆர்வத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அப்போது 13 வயதாக இருந்த அந்தச் சிறுமியுடன் சில முறை பாலியல் உறவு கொண்டு, தாயாக்கிய 53 வயது ஆடவருக்கு 26 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இன்று (ஜூன் 25) தீர்ப்பளிக்கப்பட்டது.
14 வயதாக இருந்தபோது அந்தச் சிறுமி ஆண் மகவைப் பெற்றெடுத்தார்.
ஆனால் அப்போது போலிசார் விசாரணை மேற்கொண்டபோது தனது மாற்றான் தந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு, தனது ஆண் நண்பருடன் பாலியல் உறவு கொண்டதால் கர்ப்பமானதாகத் தெரிவித்தார் அந்தச் சிறுமி.
18 வயதாகும்போது வேறு ஆண்களின் மூலம் மேலும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார் அவர்.
அந்தப் பெண்ணின் பாலியல் நடவடிக்கைகளின் தொடர்பாக அவரது தாயார் கண்டித்தபோது, மாற்றான் தந்தை தம்மை இவ்வாறு செய்ததை வெளிப்படுத்தினார்.
உறைந்துபோன அந்தத் தாய், தன் கணவரிடமும் மகளிடமும் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது என்றும் இதனை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும் சத்தியம் வாங்கிக்கொண்டார்.
பின்னர், குழந்தை நல அதிகாரி ஒருவரின் அறிவுரைப்படி, போலிசில் புகார் அளித்தபோதும், தன்னுடைய மாற்றான் தந்தையைப் பாதுகாக்க விரும்பும் தம் எண்ணத்தையும் அதில் அந்தப் பெண் தெரிவித்திருந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மூன்று கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார். ஒரு கற்பழிப்பு, வயதுகுறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட 5 குற்றச்சாட்டுகள் என வேறு ஆறு குற்றச்சாட்டுகள் தீர்ப்பு வழங்கும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
கடந்த 2013ஆம் ஆண்டு உயர்நிலை ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போதிருந்து அந்தச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், அந்தச் சிறுமியின் குழந்தைப் பருவம் களவாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online