கொரோனா கிருமித்தொற்று காரணமாக கட்டுமான நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு உதவும் வகையில் $1.36 பில்லியன் உதவித் திட்டம் புதிதாக இன்று (ஜூன் 27) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு கட்டுமான ஆதரவுத் தொகுப்புத் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கிருமிப் பரவலைத் தடுக்க கட்டுமான நிறுவனங்கள் கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டி இருப்பதால், அதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளைச் சமாளிக்க இந்த நிதி உதவும்.
கொரோனா கிருமித்தொற்றால் முடங்கிய கட்டுமானப் பணிகளால் ஏற்பட்டுள்ள செலவுகளில் பாதியை இந்த நிதி சரிசெய்யும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.
வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை வேலை அனுமதிச் சீட்டுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கான மாதாந்தர தீர்வையில் $90 கழிவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை கட்டுமான ஊழியர்களுக்கான கொரோனா கிருமித்தொற்று மருத்துவப் பரிசோதனைக்கான செலவை அரசாங்கம் தொடர்ந்து ஏற்கும்.
கொரோனா கிருமித்தொற்றால் பொருளியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க அறிவிக்கப்பட்ட வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த கட்டுமான ஆதரவுத் தொகுப்புத் திட்டம் உள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online