வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சிங்கப்பூரில் டெங்கி தொற்று மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 14,000க்கும் அதிகமான டெங்கி தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை ஆக அதிகமாக 2013ஆம் ஆண்டு 22,170 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இவ்வாண்டு அந்த எண்ணிக்கையையும் தாண்டக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் இன்று (ஜூலை 2) தெரிவித்தது.
இந்த ஆண்டு இதுவரை 16 பேர் டெங்கி தொற்றால் உயிரிழந்தனர். 2013ஆம் ஆண்டில் எண்மர் டெங்கி தொற்றால் உயிரிழந்தனர்.
பொதுவாக மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில்தான் டெங்கி தொற்று அதிகமாக இருக்கும்.
தற்போது தீவு முழுவதும் 334 டெங்கி தொற்று குழுமங்கள் இருக்கின்றன. மூன்று வாரங்களுக்கு முன்பு அந்த எண்ணிக்கை 205ஆக இருந்தது.
பெரிய டெங்கி தொற்று குழுமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் டெங்கி தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பெரும்பாலும், குடியிருபுப் பகுதிகளில் டெங்கிக்கு காரணமான கொசுப் பெருக்கம் அதிகமாக இருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.