வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம் என்ற அனுமதி வழங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், பாதுகாப்பான தூர இடைவெளி நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது, அதேசமயம் வாடிக்கையாளர்களையும் திருப்தி செய்வது என்ற இக்கட்டான சூழலை சில உணவகங்கள் எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சென்ற வாரக் கடைசியில் ‘மூன்ஸ்டோன் பார்’, கோழி இறைச்சிக்கு பெயர் பெற்ற ‘சிக்ோ லோக்கோ’ ஆகிய உணவு, பானங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் வர்த்தகங்கள் ஜூன் 28ஆம் தேதி முதல் பத்து நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இவை வாடிக்கையாளர்கள் இரவு 10.30 மணிக்கு மேலும் மது அருந்த அனுமதி அளித்து விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விரு வர்த்தகங்களும் தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரீசிலனை செய்யுமாறு விடுத்த முறையீடு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்துவது கூடாது, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில்தான் இருக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இடையே ஒன்றுகூடக் கூடாது போன்ற விதிமுறைகளைத் தாங்கள் அறிந்திருந்தபோதிலும் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பும் தேவை என்கின்றனர் உணவு, பான வர்த்தகர்கள்.
இதுபோன்ற சிக்கல்களால், சில வர்த்தகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் இறுதிக் கோரிக்கைகளை ஏற்கும் நேரத்தை முன்னால் கொண்டு வந்துள்ளன. இதன்படி, இரவு 9.45 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.