சிங்கப்பூரில் டெங்கி காய்ச்சல் ஏறுமுகமாக உள்ளது. நாள்தோறும் புதிதாக சுமார் 250 பேருக்கு அந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது.
இந்த ஆண்டில் சுமார் 16,100 பேரை டெங்கி பாதித்து இருக்கிறது. 16 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
இந்த வாரத்தின் முதல் 3.5 நாட்களில் 887 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஐந்தாவது வாரமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000ஐ விட அதிகமாக இருந்து வருகிறது.
2013ஆம் ஆண்டு முழுவதும் 22,170 பேருக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டது. 2014ல் இந்த எண்ணிக்கை 18,168 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் அதற்குள்ளாகவே 16,100 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
டெங்கி காய்ச்சல் அதிகரித்து இருப்பதற்கு அதிக தொற்று காரணமா அல்லது கொவிட்-19 காரணமாக அதிக மக்கள் சிகிச்சையை நாடுவது காரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள சா சுவீ ஹாக் பொது சுகாதாரப் பள்ளியின் ஆய்வுத் துறை துணைத் தலைவர் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் கூக் கூறினார்.
ஏற்கெனவே சொந்தமாகவே சிகிச்சை செய்துகொண்ட நோய்களுக்கு எல்லாம் இப்போது மக்கள் மருத்துவப் பராமரிப்பை நாடுவது அதிகரித்து இருக்கிறது.
ஆனாலும் டெங்கி காய்ச்சல் தலைதூக்கி வருகிறது என்பதில் ஐயமில்லை என்றும் இந்த மிரட்டலைக் கடுமையானதாகக் கருதவேண்டும் என்றும் அவர் கூறினார்.