பங்ளாதேஷை சேர்ந்த 38 வயது ஆடவர் ‘கார்டியோ - ரெஸ்பிரேட்டரி’ பிரச்சினைகளால் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவருக்கு கொவிட்-19 இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு, ஆனால், வேறு காரணங்களால் உயிரிழந்த 14வது நபர் இவர்.
வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஜூன் 28ஆம் தேதி இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பின்னர், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
அவருக்குக் கொவிட்-19 தொற்று இருப்பதாக அதே நாளில் உறுதி செய்யப்பட்டது.
பூகிஸ் ஜங்ஷன், பீப்பிள்’ஸ் பார்க் உணவு நிலையம், பழைய ஏர்போர்ட் ரோடு உணவு நிலையம், உட்லண்ட்சில் இருக்கும் சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர், விஸ்மா ஏட்ரியா ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு நேற்று (ஜூலை 9) தெரிவித்தது.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.
முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் உள்ள புளோக் 11ல் 58 வீடுகளைச் சேர்ந்தோர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த கிருமித்தொற்று குழுமத்தின் தொடர்பில் 123 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் தொற்று இல்லை.
இந்தியாவிலிருந்து ஜூன் 23ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திரும்பிய நிரந்தரவாசி மாது ஒருவருக்கு நேற்று கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது. சிங்கப்பூருக்குத் திரும்பிய பின், இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர் அவர்.
நேற்று சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேரில் 10 பேர் ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்; 11 பேரின் கிருமித்தொற்று தொடர்பு பற்றி விசாரணை தொடர்கிறது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 16ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 9ஆக இருந்தது.
ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 8ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் 12.3 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 556,000 பேர் உயிரிழந்தனர்.