சிங்கப்பூரில் இன்று (ஜூலை 14) நண்பகல் நிலவரப்படி புதிதாக 347 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,630 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 7 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்; அறுவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.
விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அல்லது 215,000க்கும் அதிகமான ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர் அல்லது அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்தது.
இம்மாத இறுதிக்குள், விடுதிகளில் தங்கியுள்ள 80 விழுக்காட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டிருப்பர் அல்லது அவர்களுக்கு பரிசோதனைகள் முடிந்திருக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சு, அடுத்த மாத மத்தியில் தங்கும் விடுதி ஊழியர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்று பரிசோதனைகள் செய்து முடிக்கப்படும் என்றது.
அடுத்த சில நாட்களுக்கு விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களிடையே கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.
அதிக எண்ணிக்கையிலான விடுதிவாசிகள் தங்களது தனிமைப்படுத்தல் காலகட்டத்தை நிறைவு செய்வதையடுத்து, அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது..
கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.